பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் அமைந்துள்ளது தேவியின் ஆலயம். 51 சக்தி பீடங்களில் 32வது சக்தி பீடமாக விளங்கும் இது, அன்னையின் உடற்கூறுகளில் வலது முழங்கால் விழுந்த இடமாகக் கருதப்படுகிறது.
அன்னை இங்கே சர்வானந்தகரீ (நர்மதா) என்ற திருநாமத்துடனும், இறைவன் வத்ரசன் (வயோமகேசர்) என்ற திருநாமத்துடனும் காட்சியளிக்கின்றனர். சோணை நதிக்கு வடபுறத்திலும், கங்கை நதிக்கு அருகிலும் அமைந்துள்ளது பாடலிபுத்திரம். இன்றைய பாட்னா.
மகத அரசன் அஜாதசத்ருவின் அமைச்சர்களான சுனிதா, வஸ்ஸôகார இருவரும், பாடலிபுத்திரத்துக்கு பரிநிர்வாணம் அடைந்த புத்தர் வந்த போது, அவரை வரவேற்று, விருந்து அளித்து மகிழ்வித்தார்களாம். அவர்கள் தோற்றுவித்த பாடலிபுத்திரம் பிற்காலத்தில் புகழ் பெற்று விளங்கும் என்றும், ஆனால் பின்னாளில் பெரும் கலவரம், நெருப்பு, வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு அழிந்து விடும் என்றும் சொன்னாராம் புத்தர்பிரான். அவர் வாக்கு பலித்து பாடலிபுத்திரம் புகழ்பெற்ற நகராக இருந்து பின்னாளில் பாழடைந்தது. அதன் பின் வெகுகாலத்துக்குப் பிறகு அங்கே புதிய நகராக பாட்னா உருவானது. இங்கே இரண்டு சக்தி பீடங்களாகக் கருதப்படும் தேவி கோயில்கள் நகரை அலங்கரிக்கின்றன. ஒரு பீடத்தில் அன்னையின் வலது முழுங்காலும், இன்னொரு பீடத்தில் ஆடையும் வீழ்ந்ததாக ஐதீகம். இந்தக் கோயில்களை "படி படன் தேவி மந்திர்' என்றும், "சோட்டி படன் தேவி மந்திர்' என்றும் அழைக்கிறார்கள்.
பாட்னா ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் "படி படன் தேவி' கோயில் உள்ளது. குல்ஜார்பாஹ் ரயில் நிலையத்தின் அருகே "சோட்டி படன் தேவி' கோயில் உள்ளது. படி படன் தேவி கோயிலில் மகாகாளி, மகாலட்சுமி, மகா சரஸ்வதி என மூன்று ரூபங்களில் அன்னை காட்சியளிக்கிறாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.