முகப்பு
வெள்ளிமணி

கடவுள் காத்திருக்கிறார்...

நாம் பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு காரணங்களுக்காக ஓடிக்கொண்டே இருக்கின்றோம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும், கடவுள் நம்பிக்கையை விமர்சிப்பவர்களும் தினமும் ஓடிக்கொண்டே இருக்கின்றனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:02 AM
பகிர்:

நாம் பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு காரணங்களுக்காக ஓடிக்கொண்டே இருக்கின்றோம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும், கடவுள் நம்பிக்கையை விமர்சிப்பவர்களும் தினமும் ஓடிக்கொண்டே இருக்கின்றனர்.

குழந்தையாய் இருந்த போது உள்ளத்தில் ஏற்படும் சிறு சிறு ஆசைகளையெல்லாம் தீர்த்துக் கொள்ள ஓடுகிறோம். இளமைக்காலத்தில் படிப்பு, பெற்றோரின் ஆசையை நிறைவேற்ற ஓடுகிறோம்.

அதன் பின்னர் வேலைக்காக, வாழ்வில் ஒரு சிறந்த நிலையை அடைய ஓடுகின்றறோம்.

திருமணத்திற்குப் பின் குடும்பம், பிள்ளைகளுக்காக ஓடிக்கொண்டே இருக்கின்றோம். இவ்வாறு வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு காரணங்களுக்காக ஓடிக்கொண்டே இருக்கின்றோம்.

இந்த ஓட்டத்தை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் இறைவன் நமக்கு கொடுத்த மிகப்பெரிய வரம் நமது ஓட்டத்தை நாம் சீர்படுத்திக் கொள்ள முடியும் என்பதுதான். இதற்கு மிகவும் அவசியமானது நமது அன்றாட அலுவல்களுக்கு மத்தியில் சற்று நேரம் கடவுளுக்காக ஒதுக்குதல்.

இன்றைய காலகட்டத்தில் நம்மில் ஒவ்வொருவரும் சொல்லும் வார்த்தை "எனக்கு நேரமே இல்லை' என்பதுதான்.

கடவுள் நம் முன் தோன்றி, "இன்று உன்னை எடுத்துக் கொள்ளப் போகின்றேன்' என்று சொன்னால் நமது பதில் "தயவு செய்து நாளை வரை காத்திருங்கள். எனக்கு செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன" என்றுதான் இருக்கும்.

கடவுள் தந்த 24 மணி நேரம் நமக்குப் போதுமானதாக இல்லை.

இந்த உலகை மீட்க வந்த யேசுவுக்கு நேரம் இருந்தது, தனிமையில் கடவுளோடு உரையாட. ஆனால் நமக்குத்தான் நேரமில்லை என்று கூறுவது உண்மை போலத் தோன்றுகின்றது. ஆனால் அதில் உண்மை இல்லை என்பதுதான் எதார்த்தம்.

நேரமின்மையல்ல நமது பிரச்னை, மாறாக நேரம் ஒதுக்க மனமில்லை அல்லது சரியாகத் திட்டமிட்டு நேரத்தை ஒதுக்கத் தெரியவில்லை என்பதுதான் உண்மை.

நம்மைப் படைத்த இறைவனுக்காக நாம் அன்றாடம் சில மணித்துளிகளாவது ஒதுக்க வேண்டும்.

நமது வாழ்க்கைப்பயணம் சீராக அமைந்திட, சரியான பாதையில் கொண்டு செல்ல, வெற்றிக்கு இது மிகவும் அவசியம்.

கடவுள் தன்னைத் தேடிவருபவர்களுக்கு நேரம் இல்லை என்ற பதிலைத் தருவதில்லை.

யோவான் நற்செய்தியில், "அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்' என்று கூறப்பட்டுள்ளது.

யேசுகிறிஸ்து தனது வாழ்வில் இந்த அழியாத வாழ்வை நாம் எப்படித் தேட வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டினார். அதற்காகத் தன் உயிரை சிலுவையில் பலியாகத் தந்து, மீட்பு என்ற வெற்றியை நமக்குத் தந்தார்.

இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது, நமது அன்றாட வேலை பளுவுக்கு மத்தியில் அவருக்காக சிறிது நேரத்தை ஒதுக்கவேண்டும் என்பதைத்தான். கடவுள் 24 மணி நேரம் மட்டுமல்ல நமது வாழ்வின் இறுதிவரை நமக்காக அன்போடு காத்திருக்கின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.