51 சக்தி பீடம்: நேபாள் கண்டகீஸ்வரி
நேபாள நாட்டில், மஸ்டாங் மாவட்டத்தில் அமைந்துள்ளது கண்டகீஸ்வரி தேவியின் ஆலயம். அன்னையின் உடற்கூறுகளில் வலது கன்னம் விழுந்த இடமாகக் கருதப்படும் இது, சக்தி பீட வரிசையில் 45வது பீடமாகத் திகழ்கிறது.
நேபாள நாட்டில், மஸ்டாங் மாவட்டத்தில் அமைந்துள்ளது கண்டகீஸ்வரி தேவியின் ஆலயம். அன்னையின் உடற்கூறுகளில் வலது கன்னம் விழுந்த இடமாகக் கருதப்படும் இது, சக்தி பீட வரிசையில் 45வது பீடமாகத் திகழ்கிறது.
தாட்சாயணியின் வலது கன்னம் மூன்று நான்கு துண்டுகளாகச் சிதறி விழுந்து ஆழ்ந்த, அகண்ட பள்ளங்களாயின. பிற்காலத்தில் இவை ஏரிகளாக மாறின. இவற்றையே தாமோதர் குண்டங்கள் என்று அழைக்கின்றனர். இந்தத் தாமோதர் குண்டமே மகாசக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. மகிமை வாய்ந்த இந்த பீடத்தின் தேவி, கண்டகீஸ்வரி- கண்டகி சண்டி, காளிகண்டகி, நாராயணி எனும் பல பெயர்களில் போற்றப்படுகிறாள். தலத்தின் úக்ஷத்ரபாலகர் சக்ரபாணி.
தாமோதர் குண்டத்திலிருந்து நதிகள் இரண்டு உற்பத்தியாகின்றன. ஒன்று மர்ஸ்யான், மற்றொன்று கண்டகி. புனிதமான கண்டகி நதியில்தான் அன்னையின் வலது கன்னம் விழுந்ததாகக் கருதப்படுகிறது. இங்கு நிகழ்ந்த வரலாற்று கதைகளுள் ஒன்று...
Advertisement
கண்டகி எனும் அழகிய தேவதாசிப் பெண். விஷ்ணுவின் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தாள். வேறு வழியின்றி குலவழக்கத்தில் ஈடுபட்டாலும், ஆன்மாவையும் உடலையும் பிரித்துப் பார்க்கத் தெரிந்திருந்த அவள், விஷ்ணு பக்தியிலேயே திளைத்திருந்தாள். இருந்தாலும், தன்னை நாடி வருபவரை தன் பதியாகவே பாவித்து, ஒரு கணவனுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளைத் தவறாமல் செய்து வந்தாள். அவளின் செயலை ஊரார் எள்ளி நகைத்தனர். ஆனால் அவள் தன் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை.
ஒருநாள், குஷ்டரோகத்தால் பாதிக்கப்பட்ட ஒருவன் அவள் இடம் நாடி வந்தான். வழக்கம்போல் தன் பதி விரத தன்மையுடன் முகம் கோணாமல் அவனுக்குப் பணிவிடை செய்தாள். காலை நேரம் கண் விழித்துப் பார்த்த போது, அவன் உடலில் உயிரின்றிக் கிடந்தான். இதை அடுத்து, அவனைத் தன் கணவனாகவே கருதி, உடன்கட்டை ஏறத் தயாரானாள் கண்டகி. அவளின் இந்தச் செயல் கண்டு உறவினர்கள் திகைத்தனர். சிதைக்குத் தீ மூட்டும் நேரம் அங்கே ஓர் அதிசயம் நடந்தது. இளைஞன் உடல் மறைந்து, தங்க மேனியாக தகதக்கும் ஸ்ரீமந் நாராயணன் சதுர்புஜங்களோடு திவ்ய தரிசனம் அளித்தார்.
கண்டகி தான் மேற்கொண்ட விரதத் தர்மத்தின் தன்மையை உலகத்தாருக்கு உணர்த்தவே தான் இப்படி வந்து ஆட்கொண்டதாக ஸ்ரீமந் நாராயணன் கூறினார். உள்ளம் குளிர்ந்த, அவள் தான் எப்போதும் அவரின் திருவடி நிழலில் இருக்க வரமளிக்க வேண்டும் என்று கேட்டாள். அதன்படியே, தான் ஒரு பக்தனின் சாபத்தால் மலையாக மாறுவதாகவும், மலையோடு சார்ந்த நதியாக கண்டகி மாறி எப்போதும் தன்னருகிலேயே இருந்து வரலாம் என்று வரமளித்தார் பெருமான். அதன்படி, கண்டகி ஒரு நதியாக மாறினாள்.
இவ்வாறு புகழ்பெற்ற கண்டகி நதியில்தான் அன்னையின் வலது கன்னம் விழுந்ததாகக் கருதப்படுகிறது. அன்னைக்கென்று இங்கே தனி ஆலயம் கிடையாது. காளிகண்டகி நதிக் கரையில்தான் முக்திநாராயணர் திருக்கோயில் உள்ளது. இதையே முக்திநாத் என்பர்.