1909 - இல் டெல் அவிவ் நகரம் (Hill of Spring) அமைக்கப்பட்டது. இந்நகரம் தான் பின்னர் இஸ்ரேலின் தலைநகராகியது என்பது குறிப்பிடத்தக்கது. 1917-இல் முதலாம் உலகப்போர் தொடங்கியது. ஆலன்பை தலைமையில் பிரிட்டிஷ் படைகள் எகிப்திலிருந்து சினாய் பாலைவனம் வழியாக ஜெருசலேம் நோக்கி விரைந்தன. அக்டோபர், 1918 -இல் ஜெருசலேம் நகரை வெற்றி கொண்ட பிரிட்டிஷ் படைகள் நகரின் புனிதத் தன்மை கருதி கால்நடையாகவே நடந்து நகருக்குள் சென்றனர். இந்த வெற்றியை யூதர்கள் தங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றியாகக் கருதினர். பின்னர் 1948 -வரை இஸ்ரேல் பிரிட்டன்வசம் இருந்தது.
இப்படியாகப் பல்வேறு காலக்கட்டங்களில் பல நாட்டு அரசர்களால் ஆளப்பட்ட இஸ்ரேலை சுதந்திர நாடாக்கி சிதறடிக்கப்பட்ட யூதர்கள் எல்லாம் அங்கு ஒன்றுகூடி வாழவேண்டும் என்ற எண்ணம் மட்டும் யூதர்கள் மத்தியில் இருந்து கொண்டே வந்தது.1882 முதல் 1903 வரை ஏராளமான யூதர்கள் முக்கியமாக ரஷியாவில் இருந்து இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்தனர்.
1897 -இல் யூத நாட்டின் ஆன்மீகத் தந்தை என்றழைக்கப்பட்ட பத்திரிகையாளர் தியோடர் ஹெர்சல் ஸ்விட்சர்லாந்தில் பேசல் என்ற இடத்தில் முதல் சீயோன் மாநாட்டைக் கூட்டி யூத மக்களுக்கான புதியதொரு நாட்டை அமைக்க யூதர்களுக்குள்ள உரிமையைப் பிரகடனம் செய்தார். 1904 முதல் 1914 வரை இரண்டாவது கட்டமாக யூதர்கள் ரஷியா மற்றும் போலந்தில் இருந்து குடிபெயர்ந்தனர்.
ஒட்டோமான் அரசின் இறுதிப்பகுதியில் துருக்கியர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதால் அராபியரிடையே அதிருப்தி ஏற்பட்டது. ஓட்டோமான் அரசிடமிடமிருந்து சுதந்திரம் வாங்கிக் கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியை நம்பி யூதர்களும் அரபிகளும் முதல் உலகப்போரில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நேச நாடுகளுக்கு ஆதரவளித்தனர். இதனால் அரபு தேசியம் அமைக்கப்பட வேண்டும் என்ற எழுச்சி ஏற்பட்டது. பாலஸ்தீனத்திலுள்ள அராபியர்களுக்கும் யூதர்களுக்கும் பகைமை வளர்ந்தது.
நவம்பர் 2, 1917 -இல் இஸ்ரேல் நாட்டை ஏற்படுத்துவதற்கு பிரிட்டிஷ் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட பிரகடனம் ஆர்தர் ஜேம்ஸ் பல்ஃபோர் என்பவரால் வெளியிடப்பட்டது. பல்ஃபோர் பிரகடனம் என்றழைக்கப்பட்ட இந்த பிரகடனம் யூதர்களுக்கு தனி நாடு அமைப்பதற்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
1919 முதல் 1923 வரை மூன்றாவது கட்டமாக யூதர்கள் ரஷியாவிலிருந்து குடியேறினர். 1922-இல் பிரிட்டன் Mandate for Palestine என்றழைக்கப்படும் தனி இஸ்ரேல் நாடு அமைக்கும் அதிகாரத்தை வழங்கியது. 1924 முதல் 1932 வரை யூதர்கள் நான்காவது கட்டமாக போலந்தில் இருந்து குடிபெயர்ந்தனர்.
முதல் உலகப்போருக்குப் பிறகு பாலஸ்தீனத்திற்கு வந்து குடியேறிய யூதர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. மேலும் மோசமடைந்து வந்த உலகளாவிய பொருளாதார சூழலாலும் வேறுபல காரணங்களாலும் அராபியர்களும் பெருமளவில் வர தொடங்கினர்.
பெருமளவில் அதிகரித்த யூதக் குடியிருப்புகளும் யூதர்களால் வாங்கப்பட்ட பண்ணை நிலங்களிலும் அவர்களுக்குச் சொந்தமான தொழிற்சாலைகளிலும் அராபியர்களை பணியமர்த்தாததும் அராபியர்களின் கோபத்தை அதிகரித்தன. இதையடுத்து அராபியர்கள் யூதர்களைத் தாக்கத் தொடங்கினர்.
ஆகஸ்ட் 1929 -இல் ஹெப்ரான் படுகொலை என்றழைக்கப்பட்ட சம்பவத்தில் 67 யூதர்கள் கொல்லப்பட்டனர். 1936 முதல் 1939 வரை அராபியர் யூதர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர்.
1941-இல் லேஹி என்ற ரகசிய அமைப்பு அமைக்கப்பட்டது; பல்மாக் எனப்படும் அதிரடிப்படையும் அமைக்கப்பட்டது. 1944-இல் பிரிட்டிஷ் ராணுவத்தின் ஒரு பகுதியாக யூத படைப் பிரிவு அமைக்கப்பட்டது. பிரச்னைகளை சமாளிக்க முடியாத பிரிட்டன், ஐ.நா. சபையிடம் தீர்வு காண வேண்டிக் கொண்டது. 15.5.1947-இல் ஐ.நா. UUNSCOP என்ற கமிட்டியை அமைத்தது. இதில் 11 நாடுகளின் பிரதிநிதிகள் இருந்தனர்.
நடுநிலைமையை உறுதி செய்வதற்காக வல்லரசு நாடுகள் எதுவும் இதில் அனுமதிக்கப்படவில்லை. ஐந்து வாரங்களுக்குப் பிறகு இந்தக் கமிட்டி தன் அறிக்கையை சமர்ப்பித்தது. இதன்படி பாலஸ்தீனம் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒரு பகுதி யூதர்களுக்கும் இன்னொரு பகுதி அராபியர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும்.
இந்த அறிக்கை ஐ. நா. சபையில் தீர்மானம் 181 வடிவத்தில் நவம்பர் 1947-இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தீர்மானத்திற்கு 33 நாடுகள் ஆதரவாகவும் 13 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. 10 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. அரபு லீக்கைச் சேர்ந்த அரபு நாடுகள் இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டவுடன் பாலஸ்தீனியர்களுக்கும் யூதர்களுக்கும் பாலஸ்தீனப் பகுதிகளைப் பிடிப்பதில் கடும் மோதல் ஏற்பட்டது. 1948- ஆம் ஆண்டு மே 14 அன்று இஸ்ரேல் நாடு பிரகடனப்படுத்தப்பட்டது. மறுநாளே அரபு நாடுகள் இஸ்ரேல் மீது படையெடுத்தன.
அன்றைய வரைபடத்தின்படி கலிலியா, ஜோப்பா, நாசரேத் ஆகிய நகரங்கள் பாலஸ்தீனத்திடம் இருந்தன. ஆனால், இந்த போரின்போது இந்த இடங்களை எல்லாம் இஸ்ரேல் ஆக்கிரமித்துக்கொண்டது. மேலும் 1967-ஆம் ஆண்டு எகிப்து, சிரீயா, ஜோர்தான் ஆகிய நாடுகளுடன் நடந்த 6 நாள் போரின்போது எகிப்தின் ஒரு பகுதியையும், பாலஸ்தீனத்தில் பெரும் பகுதிகளையும் இஸ்ரேல் ஆக்கிரமித்தது.
சர்ச்சைக்குரிய பகுதிகளான மேற்குக்கரை (ரஉநப ஆஅசஓ), காசா பகுதிகளுக்கு பாலஸ்தீனர்கள் தள்ளப்பட்டனர்.
- ஜெபலின் ஜான்
(தொடரும்...)