முகப்பு
வெள்ளிமணி

சிலுவையில் இயேசு மொழிந்த ஏழு வசனங்கள்

தவ காலத்தை நிறைவுக்கு கொண்டு வரும் புனித வெள்ளி, பெரிய வெள்ளியானது (10.04.2020) சிலுவையில் இயேசு அறையுண்ட நாள் என்று மிகவும் துக்கித்து உபவாசம் இருந்து சிலுவையில் இயேசு மொழிந்த ஏழு

பகிர்:

தவ காலத்தை நிறைவுக்கு கொண்டு வரும் புனித வெள்ளி, பெரிய வெள்ளியானது (10.04.2020) சிலுவையில் இயேசு அறையுண்ட நாள் என்று மிகவும் துக்கித்து உபவாசம் இருந்து சிலுவையில் இயேசு மொழிந்த ஏழு வசனங்களை மனதுருகி ஜெபத்துடன் ஜெபிப்பர். உலகம் எங்கும் இந்த நாளை அனுசரிப்பர்.
இயேசுவின்பால் கொண்ட பேரன்பால் சிலர் தங்களை சாட்டையால் அடித்து ரத்த காயம் அடைந்து துன்புறுவர். சில ஆலயங்களில் உண்மையாகவே சிலுவை மரம் சுமந்து வந்து ஆலயம் அருகே சிலுவையில் ஆணிகள் அடித்து அறைந்து தத்ரூபமாக நடித்து காண்பித்து இயேசு ஆண்டவர் பட்டபாடுகளையும் போர் வீரர் போன்றோர் சாட்டையால் அடிப்பர், தலையில் முள் கிரீடம் வைத்து துன்புறுவர். மனிதர் இழந்த இறை அருளையும் பாவம், சாபத்திலிருந்து விடுபடுவர்.
இயேசு ஆண்டவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பூமியில் முப்பது ஆண்டுகள் வாழ்ந்து மூன்றரை ஆண்டுகள் ஊழியம் செய்து இறை திட்டப்படி உலக மக்களுக்காக சிலுவையில் பாடுபட்டு, தம் புனித ரத்தத்தைப் பாவ நிவாரணபலியாக சிந்தினார். அவரின் புனித ரத்தம் நமது சகல பாவங்களையும் சாபத்தையும் நீக்கி சுத்திகரிக்கும். இறை மகன், மகள் என்ற உறவைத் தரும்.
வியாழன் இரவு இயேசுவை குற்றவாளிபோல சிறைபிடித்தனர். பிரதான ஆசாரியன் காய்பா, இயேசுவைக் கொன்றுவிட திட்டமிட்டு, ரோம ஆளுநர் பிலாத்துவிடம் விசாரிக்க வைத்து சிலுவையில் அறையும்படி உத்தரவு வாங்கி இயேசுவை கொடுமைப்படுத்தி கொல்காதா என்னும் இடத்தில் சிலுவையில் அறைந்தனர். கைகளிலும் கால்களிலும் சிலுவை மரத்துடன் ஆணி அடித்தனர்.
பெரும் துயரம் அடைந்த இயேசு சிலுவையில் தொங்கும்போது மக்களிடமும் இறைவனிடமும் பேசினார். அவ்வாறு தம்மை சிலுவையில் அறைந்த மக்களுக்காக மன்னிப்பை தம் தந்தையிடம் வேண்டினார்.
1. "பிதாவே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே' (லூக்கா 23:34)
தம் அருகில் அறையப்பட்ட கள்ளன் இயேசுவிடம் தம்மை மீட்கும்படி வேண்டினான்.
2. இயேசு கள்ளனை நோக்கி, "இன்றைக்கு நீ என்னுடனே வான் வீட்டில் இருப்பாய்' என்றார். (லூக்கா 23: 43)
தம்மை பத்துமாதம் சுமந்து பெற்றெடுத்த தாய் சிலுவை அருகே நின்ற வியாகுல மாதாவை நோக்கி,
3.  "அம்மா, அதோ, உன் மகன்' என்றார் சீடன் யோவானை நோக்கி, "அதோ உன் தாய்'  என்றார் யோவானிடம் . (யோவான் 19: 26, 27) தம் அம்மாவுக்கு அடைக்கலம் தந்தார்.
இயேசு ஆண்டவரின் வேதனை மிகவும் கடுமையாக இருந்தது. தம் தந்தையான இறைவனின் தொடர்பு இழந்ததை உணர்ந்தார்.
4. "என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னை கை விட்டீர்' என்று வேதனை குரல் எழுப்பினார் (மத்தேயு 27: 46)
இயேசுவின் உடலில் ரத்தம் வடிந்தது. அவருக்கு மனித தாகம் எடுத்தது.
5. "தாகமாயிருக்கிறேன்' என்றார். (யோவான் 19: 28) இயேசுவுக்கு குடிக்க காடி நனைந்த கடற்பஞ்சு கொடுக்கப்பட்டது.  இயேசு குடிக்கவில்லை.
நாள் முழுவதும் சிலுவையில் தொங்கிய இயேசு,
6. "முடிந்தது' என்று சொல்லி தலையை சாய்த்து ஆவியை ஒப்புக் கொடுத்தார். (யோவான் 19: 30)
தம் பணியை செய்து முடித்து மனிதருக்காக பலியாக ஆனார் இயேசு.
7. "பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்' என்று சொல்லி ஜீவனை விட்டார். (லூக்கா23: 46)
சிலுவையில் மொழிந்த வசனங்கள் நமக்காக கொடுக்கப்பட்டது. இப்புனித வசனங்களை தியானம் செய்ய, மனிதன் யார்? அவனின் வாழ்வு இறைவனோடு எப்படி அமையும் என்பதை விளக்கும். நாம் இயேசுவின் பாடுகள், வேதனை, சிலுவை துன்பம், இந்த ஏழு வசனங்களை நோக்குவோம். சிலுவையில் மரித்து உயிர்த்த இயேசுவின் அருள் நம்மோடு இருப்பதாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.