கருணை பொழியும் கஜேந்திர வரதராஜப் பெருமாள்
திருவல்லிக்ககேணி பார்த்தசாரதி கோயிலின் அபிமானத்தலமான விளங்குவது திருப்பத்தூர் கஜேந்திர வரதராஜப் பெருமாள் திருக்கோயில். இக்கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை கல்வெட்டுகளில் காணப்படும்
திருவல்லிக்ககேணி பார்த்தசாரதி கோயிலின் அபிமானத்தலமான விளங்குவது திருப்பத்தூர் கஜேந்திர வரதராஜப் பெருமாள் திருக்கோயில். இக்கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை கல்வெட்டுகளில் காணப்படும் ராஜராஜ சோழனுடைய வாசகத்தால் அறிய முடிகிறது.
தொடக்க காலத்தில் பெருமாள், தாயார் சந்நிதிகளும் பிற்காலத்தில் ஸ்ரீலக்ஷ்மி நாராயணன் சந்நிதியும் கட்டப்பட்டு இருப்பதாக தெரிகிறது. திருக்கோயில் 172 அடி நீளமும்,148 அடி அகலமும் உடையது. நாற்புறமும் பெரிய மதிற்சுவருடன் அமைந்துள்ளது.
கருணை பொழியும் கஜேந்திர வரதராஜப் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி ஆகிய உபய நாச்சியார்களுடன் வரம் தரும் மணிவண்ணன் ஆகவும், வினைகள் தீர்க்கும் திருவேங்கடவனாகவும் எழுந்தருளியுள்ளார்.
உற்சவர் ஸ்ரீமனத்துக்கினியான் எனும் பெயர் கொண்டவர். ஸ்ரீ வைகானஸ ஆகம முறைப்படி உத்தம பிரதிஷ்டையான "பஞ்சேபர பிரதிஷ்டை' இந்தக் கோயிலின் சிறப்பு.
மூலஸ்தானத்தில் த்ருவ, கெளதுக, உத்ஸவ, பலிபேரங்கள் எழுந்தருளியுள்ளனர்.
நவநீதக் கண்ணன், சக்கரத்தாழ்வார் எழுந்தருளி வரமளிக்கின்றனர். பிருகு, மார்க்கண்டேய முனிவர்களுக்கு பெருமாள் இங்கு காட்சி அளித்ததாகக் கூறுவர். அவர்கள் இருவரும் பெருமாளை சேவித்தவாறு கருவறையில் அமர்ந்துள்ளனர். உள் மண்டபத்தின் வடபுறத்தில் ஆழ்வார்கள் எழுந்தருளி உள்ளனர். வெளி மண்டபத்தின் வடபுறம் தெற்கு நோக்கி ஸ்ரீராமானுஜர் சந்நிதி உள்ளது.
ஸ்ரீபெருந்தேவி தாயார் சந்நிதிக்கு வெளியே அழகிய இருபத்தி நான்கு கால் மண்டபம் அமைந்துள்ளது. இது நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மண்டபத்தின் மேல்பகுதியில் தரையை நோக்கியபடி கல்லில் ஓர் அழகிய தாமரை மலர் செதுக்கப்பட்டுள்ளது.
தாமரையைச் சுற்றிலும் அஷ்டதிக்கு பாலகர்கள் உருவங்களை அற்புதமாகச் செதுக்கியுள்ளனர். இதனடியில் உள்ள கல் தூண்களிலும் அழகான சிற்பங்கள் உளளன. அவற்றில் ஆனைக்கு அருள் ஈந்த கஜேந்திர மோட்சம் சிற்பம் சிறப்பான ஒன்று.
லட்சுமி நாராயணர் சந்நிதி பெரிய விமானத்துடன் தனியாக உள்ளது. வேணுகோபாலன் சந்நிதி, ஆஞ்சநேயர் சந்நிதி அமைந்துள்ளது. வரதாராஜப் பெருமாள் சந்நிதிக்கு முன்பாக பெரிய திருவடி கருடன் சந்நிதி அமைந்துள்ளது. சுற்றுப்பிரகாரத்தில் தென்னை மரங்களும், மலர்த் தோட்டமும் உள்ளன.
இக்கோயிலானது இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.
இக்கோயிலில் ஆண்டிற்கு ஒருமுறை "திருமலையில் ஒருநாள் உற்சவம்' மற்றும் "திருப்பாவாடை உற்சவம்' நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெறு
கிறது.
புரட்டாசி சனிக்கிழமைகளில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார் வரதராஜப்பெருமாள்.
இந்த கோயிலானது வேலூர்-சேலம் நெடுஞ்சாலையில் திருப்பத்தூர் நகரப் பகுதியிலேயே அமைந்துள்ளது. திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து செல்ல ஆட்டோ வசதியும் உண்டு.