சாத்தானின் தோல்வி!
ஒரு நற்காரியத்தைத் தொடங்கும் முன் இறைவனை நினைத்து, மனமுருகி உபவாசம் கடைப்பிப்பது தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.
ஒரு நற்காரியத்தைத் தொடங்கும் முன் இறைவனை நினைத்து, மனமுருகி உபவாசம் கடைப்பிப்பது தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.
வேதாகமத்தில் இயேசு, தனித்திருந்து, தியானம் செய்து, இரவும் பகலும் இறைவனை நினைந்து மனதுருகி நாற்பது நாள்கள் உபவாசம் இருந்தார். இயேசு குழந்தையாகப் பிறந்து, தாய் மரியாவுக்கும் தந்தை யோசேப்புக்கும் கீழ்ப்படிந்து வாழ்ந்தார். அவரின் தெய்வீகத்தன்மையை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.
இந்நிலையில், அவருக்கு 30 வயதாகும் போது தன்னைத் தனிமைப்படுத்தி, தியானித்து, உபவாசமிருந்தார்.
இவ்வுலகில் அவர் செய்யப்போகும் இறைப்பணிக்காகத் தம்மை புதுப்பித்துக் கொண்டு, இரவும் பகலும் நாற்பது நாள்கள் உபவாசித்து வந்தார்.
அப்பொழுது இயேசு, சாத்தானால் சோதிக்கப்பட நேர்ந்தது. ஆவியானவரால் வனாந்தரத்துக்கு கொண்டுபோகப் பட்டார்.
அப்போது அவருக்குப் பசி உண்டாயிற்று. உபவாச நேரத்தில் மனித அவயங்கள் அமைதியாகிவிடும். உபவாச தியானம் முடிந்தவுடன் அவயங்கள் செயல்படத் தொடங்கிவிடும். இயேசுவுக்குப் பசி உண்டாயிற்று.
சாத்தான் அவரிடத்தில் வந்து ""நீ தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கற்கள் அப்பங்கள் ஆகும்படி கூறும்!'' என்றான்.
இயேசு அவனுக்கு பதிலாக ""மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல; தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே!'' என்றார்.
அடுத்து சாத்தான், இயேசுவை உயரமான தேவனுடைய ஆலய உப்பரிகையில் நிற்க வைத்து, ""இப்போது தாழக் குதியும். தேவதூதர்கள் உன்னைத் தங்கள் கரங்களால் தாங்கிக் கொள்வார்கள்!'' என்றான்.
இயேசுவோ, ""உன் தேவனை பரீட்சை செய்து பாராதிருப்பாய் என்று எழுதப்பட்டிருக்கிறது'' என்றார்.
இறுதியாக சாத்தான் அவரை உயர்ந்த மலைச் சிகரத்தின் மேல் நிறுத்தி, உலகின் மேன்மைகள் எல்லாவற்றையும் காண்பித்தான்.
கனிம வளங்களையும், கனி தரும் மரங்களையும், ஆறுகளையும், செழிப்பான வயல்களையும், பாடும் ஜீவராசிகளையும், கடலில் திரண்ட செல்வங்களையும் காண்பித்து,
""நீ, சாத்தானாகிய என்னை தாழ விழுந்து வணங்கு! நான் இம்மேன்மைகளையெல்லாம் உனக்குத் தருகிறேன்'' என்றான்.
அதற்கு இயேசு, ""உன் தேவனைத் தவிர வேறு யாரையும் வணங்கவும், சேவிக்கவும் வேண்டாம் என்ற இறை கட்டளை உள்ளதே!'' என்றார். தோல்வியுற்ற சாத்தான் அவரை விட்டு ஓடிப்போனான்.
எல்லா மனிதருக்கும் உபவாசம், தியானம், ஒழுக்கம், தனிமை ஆகியவை ஒரு பெரிய தெய்வீகச் சக்தியைத் தரும். அதையுணர்ந்து இப்புவியில் அற்றது பெற்றவராக வாழ்வோம். நாமும் தியானிப்போம், உபவாசிப்போம். இறையருள் பெறுவோம்!