திருச்செங்கோட்டின் மலை சிவலிங்கம் போன்ற தோற்றமுடையது. வடமேற்கில் இருந்து பார்க்கும்போது பசுவின் தோற்றத்துடன் காணப்படும்.
மேற்குப் பகுதியில் இருந்து பார்க்கும் போது ஆண் உருவம் படுத்திருப்பது போன்றும், தென்மேற்குப் பகுதியில் இருந்து பார்க்கும்போது பெண் படுத்திருப்பது போன்றும் அமைந்துள்ளது. இம்மலையில் அர்த்தநாரீஸ்வரர் ஆலயம், ஆதிகேசவப்பெருமாள் ஆலயம், செங்கோட்டுவேலவர் ஆலயம் ஆகியவை தனித்தனியே அமைந்துள்ளன.
விறன்மிண்ட நாயனார்:
அறுபத்திமூன்று நாயன்மார்களில் ஒருவரான விறன்மிண்ட நாயனார் பிறந்த ஊர் திருச்செங்கோடு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மரம், செடி, கொடிகள், மாடமாளிகைகள் நிறைந்ததாக இருந்ததால் கொடி மாடசெங்குன்றூர் என்றும், ரிஷிகளின் இருப்பிடமாக இருந்ததால் "திரு' என்ற அடைமொழி சேர்த்து திருக்கொடிமாடச்செங்குன்றூர் என்றும் அழைக்கப்பட்டது. காலப்போக்கில் இது மருவி "திருச்செங்கோடு' என்றானது.
ராகு, கேது பரிகாரத் தலம்: இத்தலம் ராகு, கேது பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. திருமணத் தடை, தம்பதிகள் ஒற்றுமையின்மை, கடன் பிரச்னை போன்றவை நிவர்த்தியாக ஞாயிற்றுக் கிழமை தோறும் ராகு கால வேளையில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை ராகு, கேது பரிகார பூஜைகள் நடைபெறும்.