வெள்ளிமணி

என்றென்றும் ராமன்

தன்னைக் காண வந்திருந்த அனுமனிடம், "என் மோதிரத்தை எடு, அனுமா' என்று பணித்தான். பள்ளம் ஓட்டையாகிவிட, அந்த மோதிரமோ, அப்படியே உருண்டு, ஓட்டைக்குள் புரண்டு.. .

தினமணி

இராம காதையைப் பற்றியதொரு கதை உண்டு. சிம்மாசனத்தில் அமர்ந்து தன்னுடைய கை விரல்களை நீட்டியும் மடக்கியும் விளையாடிக் கொண்டிருந்தான் இராமன்.  கை விரலில் அணிந்திருந்த மோதிரம் கழன்று விழுந்துவிட்டது. எங்கேயோ கீழே விழுந்து, விழுந்த இடத்தில் பள்ளமொன்று தோன்றி....

தன்னைக் காண வந்திருந்த அனுமனிடம், "என் மோதிரத்தை எடு, அனுமா' என்று பணித்தான். பள்ளம் ஓட்டையாகிவிட, அந்த மோதிரமோ, அப்படியே உருண்டு, ஓட்டைக்குள் புரண்டு.. .
அனுமன் இதைப் பார்த்துவிட்டான். மஹதோர் மஹீயனாகவும் அணோர் அணீயனாகவும் ஆகக் கூடிய வல்லமை கொண்ட அனுமன், தானும் அந்த ஓட்டைக்குள் புகுந்தான். மோதிரம் கீழே கீழே கீழே... போய்க் கொண்டிருக்க, அனுமனும் பின் செல்ல,  பாதாள உலகில் போய் மோதிரமும் விழுந்தது;  அனுமனும் விழுந்தான். 

அங்கிருந்த நாகலோகப் பெண்கள், அனுமனை அப்படியே அள்ளித் தூக்கினார்கள்.  "சின்னஞ்சிறு மிருகம் இது; கொண்டு போய் நம்முடைய அரசரிடம் கொடுக்கலாம்'  என்று பொன் தட்டில் வைத்து, எடுத்துப் போனார்கள். "ராம ராம' என்று இடைவிடாமல் ஓதிக் கொண்டு, தட்டோடு தட்டாக ஒட்டிக் கிடந்த அந்த வானரத்தைக் கண்டவுடன், பூதாகரமாக இருந்த அந்த பாதாள லோக அரசருக்கு ஒரு பக்கம் வியப்பு; இன்னொரு பக்கம் சிரிப்பு. சிரித்துக் கொண்டே, "யார் நீ? என்ன வேண்டும்?' என்றார்.

"நான் இராம சேவகன்; அனுமன் என் பெயர்;  என் தலைவனின் மோதிரம் இங்கே வந்துவிட்டது;  எடுத்துப் போக வந்தேன்'  என்று அனுமன் விடை கூறினான். 
பொன் தட்டிலிருந்து அவனை அப்படியே தூக்கி, இன்னொரு மாபெரும் தாம்பாளத்தில் இட்டார் அவர்.  அந்தத் தாம்பாளம் நிறைய மோதிரங்கள்; நிறைய நிறைய மோதிரங்கள். ஆயிரமாயிரம் மோதிரங்கள்.
"உன் இராம மோதிரத்தை எடுத்துக் கொள், அனுமா!''

"எப்படி எடுப்பேன்?  எல்லாம் ஒன்றே போல் இருக்கின்றனவே. என்னுடைய இராமனின் மோதிரம் எது?'' இது அனுமன். 
அரசர் சிரித்தார்.  ""எத்தனை இராமன்கள் உண்டோ, எத்தனையெத்தனை இராமாவதாரங்கள் உண்டோ, அத்தனையத்தனை மோதிரங்கள் இங்கு உண்டு. நீ பூலோகத்துக்குத் திரும்பிச் செல்லும்போது, உன்னுடைய இராமன் அங்கிருக்க மாட்டார்.  ஒவ்வொரு இராமாவதாரம் நிறையும்போதும், இராம மோதிரம் கீழே விழும். அல்லது அவனே நழுவவிடுவான். மோதிரங்களைச் சேகரித்து இங்கே வைத்துக் கொள்வேன். போய்வா அனுமா''  என்று நீளமாகப் பேசி விடை கொடுத்தார். 

உண்மைதான். அனுமன் பூலோகம் திரும்பி, அயோத்திக்குச் சென்றபோது, இராமன் அங்கில்லை.  குசன் ஆட்சியில் இருந்தான்.  அருகில் லவன் அமர்ந்திருந்தான்.  அனுமன் மோதிரத்தைத் தேடிப் போன அன்று மாலை, நான்கு தலை பிரம்மாவை அழைத்துக் கொண்டு வசிட்டர் வந்தாராம்.   ஏதோ தனியாகப் பேச வேண்டும் என்று இராமனிடம் சொன்னார்களாம்.  யாராவது இடையிட்டு உள்ளே வந்துவிட்டால், அவர்கள் தலையைக் கொய்து விடவேண்டும் என்று இராமனுக்குக் கட்டளை வேறு இட்டார்களாம். 

இலக்குவனைக் காவல் வைத்துவிட்டு, உள்ளே மூவரும் பேசினார்கள். 
இதற்கிடையில் விச்வாமித்திரர் வந்தார்.  ""இராமனை அவசரமாகக் காண வேண்டும்''  என்றார். அனுப்புவதற்கு இலக்குவன் தயங்க, ""உள்ளே விடவில்லையென்றால், நாட்டுக்கு சாபம்' வருமென்றார். எல்லோருக்கும் ஏன் சாபம்? தனக்கு மட்டும் துன்பம் வரட்டும் என்னும் எண்ணத்துடன் இலக்குவன் உள்ளே சென்றான். விச்வாமித்திரர் வந்திருப்பதைக் கூறினான்.  விச்வாமித்திரரை இராமன் உள்ளழைத்தான்.  சிறிது நேரத்தில் எல்லோரும் விடை பெற்றனர்.  இப்போது இராமனிடம் வந்த இலக்குவன், இடையிட்டதற்காகத் தன்னைக் கொல்லும்படி வேண்டினான். 

"தேவையில்லை இலக்குவா. நாங்கள் பேசி முடித்துவிட்டோம்.''

"இல்லை அண்ணா, தம்பிக்காகத் தாங்கள் விதியை மீறக்கூடாது. பிராட்டிக்கே பொது விதியைப் பொருத்தியவர் தாங்கள்.  எனக்கு மட்டும் விதிவிலக்கா? நான் செல்கிறேன்'' என்று கூறிய இலக்குவன், சரயூவில் இறங்கினான்.  
ஆதிசேஷன்தானே இலக்குவன். அவனுடைய பூலோக வாசம் நிறைவடைந்தது. பஞ்சணையாகவும் சிம்மாசனமாகவும் இருக்கும் சேஷநாகன் சென்றபின்னே, இராமனுக்கு எப்படி நிலை கொள்ளும்? பிற தம்பியரை அழைத்து விஷயத்தைச் சொல்லிவிட்டு,  குசனுக்கும் முடிசூட்டிவிட்டு, லவனைத் துணை வைத்துவிட்டு, தம்பிகளின் மகன்களுக்கு அரசாட்சியின் பகுதிகளைப் பிரித்துக் கொடுத்துவிட்டு, எல்லாவற்றையும் இரண்டொரு நாள்களில் முடித்துவிட்டு, பரத சத்ருக்னரோடு தானும் சரயூவில் இறங்கினான். 

சொல்லப்போனால், அவதாரம் பூர்த்தியாகவேண்டியதைப் பற்றிச் சொல்லவே வசிட்டரும் பிரம்மாவும் விச்வாமித்திரரும் வந்திருந்தனர். 

இந்தக் கதையின் உட்பொருள்? இராமாவதாரங்கள் பலப்பல என்பதினும், இராமாயணங்கள் பலப்பல என்பதேயாகும். இராமாயணத்தைக் கதை என்பதைவிட, பாரதத்தின் ஆன்ம இழை எனலாம்.  இந்திய மக்களின் ஆன்மாக்களையெல்லாம் ஒன்றிணைக்கும் உயிர்மாலை. உள்ளங்களின் நம்பிக்கை, எண்ணங்களின் எழுச்சி, சிந்தனையின் செறிவு. 

மக்களின் உயிராதாரம் என்பதால்தான், இந்தக் கதை, இந்த நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உண்டு; அனைத்து மொழிகளிலும் உண்டு; அனைத்து வடிவங்களிலும் அனைத்து மரபுகளிலும் உண்டு. 
கதைப்போக்கில் சிறு சிறு மாற்றங்களும், வேறுபாடுகளும் இருந்தாலும், இராமாயணம் என்னும் உணர்வும், இராமகாதை என்னும் நம்பிக்கையும், இராமபக்தி என்னும் ஊக்கமும், இந்தியர்கள் யாவருக்கும் ஒன்றே! 
தமிழ்கூறு நல்லுலகிலும் இராமனைப் பற்றிய தகவல்கள் பல, மக்களின் சொல் வழக்கிலும் செயல் வழக்கிலும் இருந்துள்ளன. 

சங்கப்பாடல்களிலேயே, இராமாயணச் சங்கதிகள் உண்டு. 
வென்வேள் கவுரியர் தொன்முது கோடி
முழங்கு இரும் பெüவம் இரங்கு முன்துறை
வெல் போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல் வீழ் ஆலம்போல,
ஒலி அவிந்தன்று இவ்வழுங்கல் ஊரே

மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் இயற்றிய அகநானூற்றின் 70}ஆவது பாடலில், இலங்கை மீது போரெடுத்துச் செல்லுதல் பொருட்டு, இராமனும் பிற வானரவீரர்களும், கோடிக்கரையில், ஆலமரம் ஒன்றின்கீழ் இருந்து, வழிமுறைகளை ஆராயும்போது, மரக் கிளைகளில் அமர்ந்திருந்த பறவைகளின் ஒலி (இராம விவாதத்துக்கு இடையூறு செய்யாவகையில்) அடங்கியது என்னும் தகவல் சுட்டப்பெறுகிறது. 

தலைவிக்குத் தோழி உரைக்கும் வகையில் அமைந்த இப்பாடலில், பறவைகளின் ஒலி அடங்கியதுபோல், ஊரின் வம்பு வளர்க்கும் வாய் அடங்கியது என்றே தோழி கூறுகிறாள். இராமகாதை நிகழ்ச்சி ஒன்றை, நிகழ்கால நிகழ்ச்சிக்கு மேற்கோளாகக் காட்டவேண்டுமெனில், இப்படிப்பட்ட கதைச் சம்பவங்கள் பலகாலமாக மக்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும் என்பதை உணர்ந்து கொள்ளலாம். 

சீதையை இராவணன் தூக்கிச் சென்றான்.  இராமனுக்கு வழி தெரிவிப்பதற்காக, தான் அணிந்திருந்த அணிகலன்களைச் சீதை தூக்கியெறிந்தாள். அவை, காட்டுப் பகுதியிலும் மலைப் பகுதியிலும் விழுந்தன. இரலைமலைப் பகுதியில் வாழ்ந்த குரங்குகள் இவ்வணிகலன்களைக் கண்டன. மனிதர்கள் அணியும் நகைகளைப் பற்றிக் குரங்குகளுக்கு என்ன தெரியும்? கழுத்தில் இடுவதைக் காதிலும், காதில் இடுவதைக் கையிலும், இன்னும் பலப்பல வகைகளிலும் மாற்றி மாற்றி மாட்டிக் கொண்டு அழகு பார்த்தன. இந்தத் தகவலை உரைக்கும் பாடல் ஒன்று, புறநானூற்றில் காணப்படுகிறது. 

எஞ்சா மரபின் வஞ்சி பாட, எமக்கென வகுத்த அல்ல, மிகப்பல, 
மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை, தாங்காது பொழி தந்தோனே, 
அது கண்டு, இலம்பாடு உழந்த, என் இரும்பேர் ஒக்கல், 
விரல்செறி மரபின செவி தொடக்குநரும், செவித் தொடர் மரபின விரல் செறிக்குநரும், 
அரைக்கமை மரபின மிடற்றியாக்குநரும், 
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை வலித்தகை அரக்கன் வெüவிய ஞான்றை, 
நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின், செம்முகப் பெருங்கிளை இழைப் பொலிந்தாஅங்கு....

சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி என்னும் அரசன், ஊன்பதி பசுங்குடையார் என்னும் புலவருக்குப் பரிசுப் பொருள்கள் பலவற்றை அளித்தான். அப்பரிசுப் பொருள்களில் பற்பல அணிகலன்கள் இருந்தன. அவை, அரசர்கள் அணியக் கூடியவை. அவற்றை எவ்வாறு அணிவது என்று அறியாத பசுங்குடையாரின் உறவினர்கள், சீதை எறிந்த நகைகளை மாற்றி மாற்றி அணிந்துகொண்ட குரங்குகளைப் போல், விரலில் இடவேண்டியதைச் செவிகளில் இட்டனர்;  செவிகளில் அணிய வேண்டியவற்றை விரல்களிலும், இடுப்பில் அணிபவற்றைக் கழுத்திலும் அணிந்துகொண்டனர். 

பரிசுப் பொருள்களை வரையிலாது கொடுத்த அரசனைப் பற்றியும், உறவினர்களின் மகிழ்ச்சி கண்டும் பசுங்குடையார் பாடிய இப்பாடலில் (புறம் 378), இராமாயணக் கதைப் போக்கின் நுணுக்கமான நிகழ்வு ஒன்று ஒப்பிடப்பெறுகிறது என்றால், எந்த அளவுக்கு மக்கள் வழக்கில் இராமகாதை புழங்கியிருக்க வேண்டும்! 

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராம ஊராட்சி பகுதிகளில் நடப்படும் மரக்கன்றுகளை தத்தெடுத்து பராமரிக்க வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்

திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்லூரியில் புதிய வாக்காளா் சோ்க்கை முகாம்

அரசு பொறியியல் கல்லூரியில் வளாக நோ்காணல்

மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி

சாலைகள் மேம்படுத்தும் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT