மதுரையில் வணிகர் குலத்தில் பிறந்த மூர்த்தியார், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். இவர் நாள்தோறும் மதுரை சொக்கநாதருக்கு சந்தனக்காப்பு அணிவித்து மகிழ்வார்.
அப்போது கர்நாடகத்தைச் சேர்ந்த வடுக மன்னர், மதுரை மீது போர் தொடுத்து வென்றான். அந்த மன்னர் சிவனடியார்களை துன்புறுத்தி வந்தார். மூர்த்தி நாயனாரின் திருத்தொண்டையும் ஏளனம் செய்து, அவருக்கு பல கொடுமைகள் செய்தார். மூர்த்தியார் அதை பொருட்படுத்தாமல், திருத்தொண்டை தவறாது செய்து வந்தார். அதனால் மன்னரும் மூர்த்தியாருக்கு சந்தன கட்டைகள் கிடைக்காதவாறு பல தடைகளை விதித்தார்.
சந்தன கட்டைகள் கிடைக்காத மூர்த்தியார் மனம் வருந்தி, தனது முழங்கையை ஒரு கருங்கல்லில் வைத்து தேய்த்தார். முழங்கை தேய்ந்து ரத்தம் ஆறாக ஓடியது. எலும்பும் சதையும் சீழும் ஒழுகியது. இதைக் கண்ட சொக்கநாதர் பொறுக்க முடியாமல், ""ஐயனே இச்செயலை செய்யாதே, நீயே இந்நாட்டை ஆண்டு சந்தனக் காப்பிடும் உன் திருத்தொண்டை செய்து முடிவில் சிவலோகம் அடைவாய்'' என்று அசரீரியாக ஒலிக்கச் செய்தார்.
அன்றிரவு மன்னர் திடீரென இறந்தார். மன்னருக்கு மகப்பேறு இல்லாததால் அமைச்சர்கள் பட்டத்து யானை கொண்டு, அரசரைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தனர்.
பட்டத்து யானை மூர்த்தி நாயனாரை மன்னராகத் தேர்ந்தெடுத்தது. மூர்த்தி நாயனார் திருநீறு, ருத்ராட்சம் , சடை முடி என்ற மூன்றும் பூண்டு சிவநெறியுடன் அரசாண்டு, சொக்கநாதருக்கு அன்றாட சந்தன காப்பிடும் தனது திருத்தொண்டை செய்து, முடிவில் சிவபதம் அடைந்தார். இவரது குரு பூஜை ஆடி மாதம் கிருத்திகை நட்சத்திரம் வரும் நாளாகும். இந்த ஆண்டு ஆகஸ்ட் 16-இல் குரு பூஜை கொண்டாடப்படுகிறது.
- மு.கீதா குமரவேலன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.