சிவத் தொண்டு புரிந்த நாயன்மார்கள் அறுபத்து மூவரில் ஆகஸ்ட் 22, 23-ஆம் தேதிகளில் குருபூஜை காண்பவர்கள் குறித்து அறிவோம்.
புகழ்த்துணை நாயனார்:
கும்பகோணத்துக்கு அருகேயுள்ள
"அழகாபுத்தூர்' என்ற செருவிலிப்புத்தூரில் சிவ வேதியர் குலத்தில் பிறந்த இவர்,
சொர்ணபுரீஸ்வரருக்குத் தொண்டு செய்து வந்தார்.
பஞ்சம் தோன்றிய நேரத்தில் புகழ்த்துணை நாயனார் ஒருநாள் சிவனை நீராட்டும்போது, பசியால் உடல் தளர்ந்த நிலையில் கையிலிருந்து தண்ணீர் குடம் நழுவி, சிவனின் திருமுடி மேல் விழுந்து உடைந்தது. நாயனார் சோர்வுற்று விழ, உறக்கம் வந்தது. அவரது கனவில் சிவன் தோன்றி, "பஞ்சம் முடியும் வரை நாள்தோறும் ஒரு பொற்காசு வைப்போம்' என்றார். அதைக் கொண்டு, அவர் தனது துன்பம் நீங்கி, சிவத் தொண்டு செய்தார். இவரது குரு பூஜை ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரம் வரும் நாளாகும். ஆகஸ்ட் 22}இல் இவருக்கு குருபூஜை நடைபெறுகிறது.
அதிபத்த நாயனார் :
நாகப்பட்டினம் அருகேயுள்ள நுளைப்பாடிகுப்பத்தில் அதிபத்தர் பிறந்தார். நாள்தோறும் வலையில் அகப்படும் மீன் குவியலில் தலைசிறந்த மீனை, "அருள் கூத்து ஆடும் சிவனுக்கு உரியது' என்று கடலில் விட்டுவிடுவார். நாளடைவில் இவரது செல்வம் குறைந்தது. ஒருநாள் வலையில் நவமணிகளை உறுப்புகளாகக் கொண்ட தங்க மீன் அகப்பட, அதிபத்தர் கடலில் வீசினார். இவருக்கு சிவன் காட்சியளித்து, அருள் புரிந்தார். இவரது குரு பூஜை ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரம் வரும் நாளாகும். ஆகஸ்ட் 22}இல் இவருக்கு குருபூஜை நடைபெறுகிறது.
இளையான்குடி மாறனார்:
இளையான்குடியில் வேளாளர் குலத்தில் மாறனார் தோன்றினார். தனது செல்வம் குறைந்த நிலையிலும், சிவனடியாருக்கு சோறிடும் திருத்தொண்டை தவறாமல்
செய்து வந்தார்.
மழைக்காலத்தில் ஒருநாள் சிவன், அடியாரின் வேடம் தரித்து மாறனாரின் வீட்டுக்குச் சென்று, கதவைத் தட்டினார். பசியோடும், தலைவலியோடும் வீட்டினுள் இருந்தார் மாறனார். அவர் எழுந்து வந்து, சிவனடியாரை உள்ளே அழைத்துச் சென்றார்.
மாறனாரின் மனைவியார், ""இன்று வயலில் விதைத்த விதை நெல், மழையில் முளைத்திருக்கும். அதை வாரிக் கொண்டு வந்தால், உணவு சமைக்கலாம்'' என்றார். உடனே மாறனார் கூடையைக் கவிழ்த்தவாறு, நெல் சேகரித்துவந்தார். வீட்டு கூரையைத் தாங்கி நிற்கும் வரிச்சுக் கொம்புகளை அறுத்து, விறகுகளைச் சேகரித்தார். சமைத்து உணவைப் பரிமாற அடியாரை அழைத்தபோது, சிவன் ஜோதி வடிவில் காட்சி அளித்தார். தம்பதியர் வீடு பேறு அடைந்தனர்.
மாறனாரின் குருபூஜை ஆவணி மாதம் மகம் நட்சத்திரம் வரும் நாளாகும். ஆகஸ்ட் 23}இல் இவருக்கு
குருபூஜை நடைபெறுகிறது.
செருத்துணை நாயனார்:
திருவாரூர் குமரக்கோட்டத்தில் வேளாளக் குடியில் பிறந்தவர் செருத்துணையார். குறுநில மன்னரான இவர், வன்மீகநாதரை நாள்தோறும் வழிபட்டார்.
ஒருநாள் காடவர்க்கோன் கழற்சிங்கருடைய பட்டத்தரசி, திருவாரூர் கோயிலின் திருப்பூ மண்டபத்தில் கீழே விழுந்து கிடந்த மலரை எடுத்து முகர்ந்தாள். அதைக் கண்ட செருத்துணை நாயனாரோ, பட்டத்தரசியைத் தள்ளி, கூர்மையான கத்தியால் மூக்கை அறுத்தார்.
நாயனாரின் குருபூஜை ஆவணி மாதம் பூசம் நட்சத்திரம் வரும் நாளாகும்.
}மு.கீதா குமரவேலன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.