உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட சீன நாட்டில், வரும் புத்தாண்டு முதல் தம்பதியர்கள் இரு குழந்தைகளை பெற்றுக் கொள்ளுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக "நாம் ஒருவர் நமக்கு ஒருவர்" என்ற திட்டத்தை 1978 ஆம் ஆண்டு சீன அரசு அறிவித்தது. இதையடுத்து தம்பதியர் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். சட்டத்தை மீறுவோருக்கு அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவதுடன், அபராதமும் விதிக்கபட்டது. எனினும் 2013 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்தன்படி, நகர்புறங்களில் வசிக்கும் தம்பதியர் மட்டும் இரு குழந்தைகள் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
சமீபத்தில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணகெடுப்பின் படி அந்நாட்டின் மக்கள் தொகை சுமார் 136 கோடி ஆக இருப்பது தெரியவந்தது. இதில் 60 வயதுக்கு அதிகமானவர்கள் 212 மில்லியன் பேர் இருப்பதாகவும், இது மொத்த மக்கள் தொகையில் 15.5 சதமாகவும் இருந்தது.
வரும் 2030 ஆம் ஆண்டு சீன மக்கள் தொகையில் 65 வயதுக்கு அதிகமானோர் 18 சதம் வரை இருப்பர் என ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் முதியோர் காப்பகங்களின் தேவை அதிகரிப்பதோடு, வேலை செய்வதற்கு இளைஞர்கள் பற்றாக்குறையும் ஏற்படும் என தெரியவந்தது.
இதையடுத்து 35 ஆண்டுகளுக்கும் மேலான சட்டத்தை திருத்த சீன அரசு முடிவு செய்தது. இதன்படி சீனாவில் உள்ள அனைத்து தம்பதியினரும் இரு குழந்தைகள் பெற்றுக் கொள்ள அனுமதி அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
சீன வரலாற்றில் அதி முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்மானம், இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி வரும் புத்தாண்டு முதல் சீன தம்பதியினர் இரு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.