உலகம்

ஜெருசலேம் குறித்த அமெரிக்க நிலைப்பாடு: ஐ.நா. நிராகரிப்பு

DIN

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அங்கு தூதரகம் அமைக்கும் அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்தது.
ஜெருசலேம் தொடர்பான அமெரிக்க அதிபரின் அறிவிப்பு வெளியானதையடுத்து, முஸ்லிம் நாடுகளில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் டிசம்பர் மாதத்துக்கான தலைமையேற்றுள்ள ஜப்பான் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற அவசரக் கூட்டத்தின்போது, பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள 15 நாடுகளில் 14 நாடுகள் அமெரிக்காவின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்தன.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஜெருசலேம் சர்ச்சை குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளது; அவற்றுக்கு விரோதமாக அமெரிக்காவின் அறிவிப்பு அமைந்ததாக அந்த நாடுகள் விமர்சித்தன.
"கிழக்கு ஜெருசலேம், பாலஸ்தீனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்றும், ஒருங்கிணைந்த ஜெருசலேம் நகரம் இஸ்ரேல் - பாலஸ்தீனின் கூட்டுத் தலைநகராக இருக்க வேண்டும்' என்பதே பிரிட்டன் நிலைப்பாடு என்று ஐ.நா.வுக்கான அந்நாட்டு தூதர் மாத்யூ ரைக்ராஃப்ட் கூறினார்.
ஜெருசலேம் குறித்த அமெரிக்காவின் அறிவிப்பை விளக்கி பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி கூறியது:
ஜெருசலேமில் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை அமைக்கவும் அந்த நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கவும் முடிவு செய்து அமெரிக்க அதிபர் அறிவிப்பு வெளியிட்டார். இது பல கவலைகளையும் கேள்விகளையும் எழுப்பும் என்று தெரிந்துதான் மிகுந்த யோசனைக்குப் பிறகு இந்த முடிவை அவர் அறிவித்தார்.
அந்தப் பிராந்தியத்தில் அமைதி நிலவ இந்த அறிவிப்பு உதவும். அனைத்துத் தரப்பினரும் ஒருவருக்கொருவர் நேர்மையுடன் நடந்து கொண்டால்தான் அமைதிக்கான முயற்சிகளில் முன்னேற்றமும் வெற்றியும் காண முடியும்.
தற்போதைய உண்மை நிலவரத்தின் அடிப்படையில் அமெரிக்காவின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. எது ஏற்கெனவே வெளிப்படையாக உள்ளதோ, அதனை அமெரிக்கா அங்கீகரித்திருக்கிறது. ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகர். டெல் அவிவ் நகரில் உள்ள இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமில் அமைக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு அதிபர் உத்தரவிட்டுள்ளார். இதை மட்டும்தான் அதிபர் செய்துள்ளார். ஜெருசலேம் நகர்ப்புற எல்லை வரையறைகள், எந்தப் பகுதியில் யார் யாருக்கு உரிமை உண்டு போன்ற விவகாரம் எதையும் அதிபர் அறிவிப்பு தொடவேயில்லை. அது இரு தரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்மானிக்கப்பட வேண்டியது என்று அமெரிக்கா இப்போதும் கூறுகிறது. 
ஜெருசலேம் எல்லைக்கோடுகள் குறித்து அதிபர் எதுவும் கூறவில்லை. அப்பகுதியில் இரு தரப்பினரும் கோரும் இறையாண்மை குறித்து அதிபர் கருத்து வெளியிடவில்லை. அதையெல்லாம் இஸ்ரேலியரும் பாலஸ்தீனரும் பேசித் தீர்வு காண வேண்டும் என்பது அமெரிக்காவின் நிலைப்பாடு.
தற்போது மலைக்கோயில், அல்-அக்ஸா மசூதியில் நடைபெற்று வரும் நிர்வாகம், வழிபாடு ஏற்பாடுகளில் எந்த மாற்றத்தையும் அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பு கொண்டு வரவில்லை. அங்கு தற்போதுள்ள ஏற்பாடே தொடர வேண்டும் என்றுதான் கூறியிருக்கிறார்.
இவ்வாறு நிக்கி ஹேலி தெரிவித்தார்.
அமெரிக்காவின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஸ்வீடன் கூட்டறிக்கை வெளியிட்டன. "அமெரிக்காவின் அறிவிப்பு ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின் அடிப்படையில் இல்லை; அந்தப் பிராந்தியத்தில் அமைதி ஏற்பட இந்த அறிவிப்பு உதவாது; இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையேயான பேச்சுவார்த்தை மூலமே இதற்குத் தீர்வு காண முடியும்' என்று அந்தக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முடிவு சர்வதேச சட்டங்களுக்கு விரோதமானது என்று ஐ.நா.வுக்கான பாலஸ்தீன் பார்வையாளர் ரியாத் மன்சூர் கூறினார்.
இதனிடையே, இஸ்ரேல் தூதர் டேனி டேனன் ஐ.நா. சபையில் பேசியதாவது: அமெரிக்காவின் துணிச்சலான முடிவுக்கு இஸ்ரேல் நன்றி தெரிவிக்கிறது. அதிபர் டொனால்ட் டிரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ், ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி ஆகியோருக்கு நன்றி. ஜெருசலேமில் உள்ள மலைக்கோயிலில் அகழாய்வில் கிடைத்த கி.பி. 67-ஆம் ஆண்டைச் சேர்ந்த காசில் "புனித ஜெருசலேம்' என்று பொறித்துள்ளது. கி.பி. 70-இல் ஜெருசலேமில் யூதக் கோயில் அழிக்கப்பட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு யூதர்கள் தங்கள் தாயகத்தைவிட்டுத் துரத்தப்பட்டனர் என்று அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT