டமாஸ்கஸ்: உணவும் நீரும் இன்றி ஒரு நாள் முழுவதும் இருந்திருக்கீறீர்களா டிரம்ப்? என்று பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டரில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை நோக்கி சிரியாவைச் சேர்ந்த ஏழு வயது சிறுமியொருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் 20-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். பதவியேற்ற உடனேயே அவர் பிறப்பித்த உத்தரவுகளில் முக்கியமானது சிரியா, ஈரான் உள்ளிட்ட ஏழு இஸ்லாமிய நாடுகளில் இருந்து அகதிகள் அமெரிக்காவுக்கு வர தடை விதித்ததுதான். அத்துடன் அவர் டிவிட்டரில் இந்த தடையானது அமெரிக்காவுக்குள் கெட்ட மனிதர்கள் வராமல் தடுக்கவே என்று கூறியிருந்தார்.
அவ்வாறு அவர் தனது அறிவிப்பை வெளியிட்ட உடன், சிரியாவைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி பானா அலபெத் டிவிட்டர் வழியாக அவருக்கு பதில் அளித்திருந்தாள் அதில், 'நான் என்ன தீவிரவாதியா? அகதிகளை நாட்டுக்குள் வர விடாமல் தடுப்பது மிகவும் தவறு. ஒரு வேளை அது சரியென்றால், பிற நாடுகள் போரின்றி அமைதியாக இருக்க உதவுங்கள்' என்று பதில் அளித்திருந்தார்.
தற்பொழுது பானா டிவிட்டரில் வெளியிட்டுள்ள புதிய வீடியோ ஒன்றில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம், 'என்றாவது உணவும் நீரும் இன்றி ஒரு நாள் முழுவதும் இருந்திருக்கிறீர்களா டிரம்ப்? சிரியாவில் உள்ள அகதிகள் மற்றும் குழந்தைகளின் நிலையை கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்' என்று கேட்டுள்ளார்.
கடந்த 2006-ஆம் ஆண்டில் இருந்து தனது தாயார் பாதிமா உதவியுடன் பானா டிவிட்டரில் சிரியாவில் நடக்கும் போர் பற்றிய உணர்ச்சி மிகு கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அவரை டிவிட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை மூன்றரை லட்சத்திற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.