உலகம்

ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத சதி முறியடிப்பு

DIN

விண்ணில் பறக்கும் விமானத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்க முஸ்லிம் பயங்கரவாதிகள் தீட்டிய சதித் திட்டத்தை முறியடித்ததாக ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ஆஸ்திரேலியா பல வகையான பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறது. எந்த விதமான எச்சரிக்கையையும் நாம் பெற முடியாதபடி, தனி நபராகச் செயல்பட்டு பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்துவது ஒரு ரகம். விரிவான சதித் திட்டம் தீட்டி பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவது மற்றொரு வழி. இரண்டாவது ரகத்தைச் சேர்ந்த சதித் திட்டமொன்றை நாட்டின் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் சனிக்கிழமை இரவு முறியடித்துள்ளனர். விண்ணில் பறந்து கொண்டிருக்கும் விமானத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்க முஸ்லிம் பயங்கரவாதிகள் தீட்டிய சதித் திட்டத்தை பயஙகரவாதத் தடுப்பு காவல் படையினர் முறியடித்தனர். சிட்னி நகரில் 5 இடங்களில் நியூ செளத் வேல்ஸ் மாகாண போலீஸார் நடத்திய அதிரடி சோதனை நடவடிக்கையைத் தொடர்ந்து 4 பேர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாதத்தை எதிர்த்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் நமது காவல் படையினர் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டு, உறுதியுடன் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் இந்த சதித் திட்டம் அம்பலமானதைத் தொடர்ந்து விமானப் பயணங்கள் குறித்து யாரும் அச்சப்பட வேண்டிய தேவையில்லை. பொதுமக்களும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அச்சமின்றி, துணிவுடன் விமானப் பயணங்களை மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பான விமானப் பயணத்தை மேற்கொள்வதில் பயணிகளும் ஒத்துழைக்க வேண்டும். தங்களின் விமானங்கள் புறப்படுவதற்கு குறைந்தபட்சம் 3 மணி நேரமாவது முன்னதாக விமான நிலையங்களுக்கு வந்து பாதுகாப்பு சோதனைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். குறைவான பொருள்களை எடுத்து வந்தால் விரைவாக சோதனைகள் முடிந்துவிடும். இவை பொதுமக்களுக்குத் தெரியும் வெளிப்படையான பாதுகாப்பு அம்சங்கள். தெரியாத, மறைமுகமாகச் செயல்படும் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஏராளமாக உள்ளன. எனவே எந்தவித அச்சமின்றி அனைவரும் விமானங்களில் பயணம் செய்யலாம் என்றார் அவர்.
இது தொடர்பாக அந்நாட்டு காவல் துறைத் தலைவர் ஆண்ட்ரூ கோல்வின் கூறியது:
இது இஸ்லாமிய பயங்கரவாதம் என்று கூற இடமிருக்கிறது. சதித் திட்டம் குறித்து புதன்கிழமை உளவுத் தகவல் கிடைத்தது. உடனடியாக விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்றது. உளவுத் தகவல் அடிப்படையில் சிட்னியில் 5 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து 4 பேர் கைது செய்யப்பட்டனர். சிட்னியின் ஸர்ரி ஹில்ஸ் புறநகர் பகுதியில் இருந்த வீட்டில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு தயாரிப்பதற்கான பொருள்கள் கைப்பற்றப்பட்டன. விண்ணில் பறக்கும் விமானத்தை சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைத்து தகர்த்து வீழ்த்த சதித் திட்டம் தீட்டப்பட்டது. நாட்டின் ஒட்டுமொத்த விமானப் போக்குவரத்துத் துறையை இலக்கு வைத்து சதி நடைபெற்றுள்ளது என்றார்
அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT