சான் ப்ரான்ஸிஸ்கோ: டிவிட்டர் நிறுவன வாடிக்கையாளர் சேவைப் பிரிவு ஊழியர் ஒருவரின் விஷமத்தால், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் டிவிட்டர் கணக்கு நீக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பிரபல சமூகவலைத்தளமான டிவிட்டரில் @realdonaldtrump என்ற முகவரியில் தொடர்ந்து இயங்கி வருபவர். அவரது சில சர்ச்சைக்குரிய ட்வீட்டுகளின் காரணமாக அவருக்கு அங்கே கணிசமான விமர்சகர்களும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அமெரிக்க நேரப்படி நேற்று இரவு 7 மணிக்கு முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் டிவிட்டர் கணக்கு அந்த தளத்திலிருந்து சில நிமிடங்களுக்கு நீக்கப்பட்டது. பின்னர் 11 நிமிடங்களுக்குப் பிறகு அவரது முகவரி மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.
இது தொடர்பாக டிவிட்டர் நிர்வாகத்தின் அரசாங்கம் மற்றும் தேர்தல் தொடர்பான துறையானது அறிக்கை ஒன்றின் மூலம் இன்று விளக்கமளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் டிவிட்டர் கணக்கு நேற்று காரணமில்லாமல் முடக்கப்பட்டது. இந்த முடக்கமானது சுமார் 11 நிமிடங்களுக்கு நீடித்தது. இது எங்கள் நிறுவனத்தின் ஊழியர் ஒருவரால் நிகழ்ந்த மனிதத் தவறாகும்.தனது பணியின் கடைசி நாளான நேற்று அந்த ஊழியர் இந்த தவறினைச் செய்துள்ளார். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.