2017 உலக அழகியாக இந்தியப் பெண் தேர்வு!
2017-ம் ஆண்டுக்கான உலக அழகியாக இந்தியாவைச் சேர்ந்த மானுஷி ஷில்லார், சனிக்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
2017-ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி சீனாவில் நடைபெற்றது. இதன் இறுதிச்சுற்றுப் போட்டி சனிக்கிழமை நடத்தப்பட்டது.
இதில், இந்தியாவைச் சேர்ந்த மானுஷி ஷில்லார் (20 வயது) 2017-ம் ஆண்டுக்கான உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார். ஹரியாணாவைச் சேர்ந்த மானுஷி மருத்துவ மாணவி ஆவார்.
108 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களுக்கு மத்தியில் அவர் இந்தப் பட்டத்தை வென்றுள்ளார். இம்மகுடம் சூடும் 6-வது இந்தியப் பெண் என்ற பெறுமையும் பெற்றார். இதையடுத்து 2016-ம் ஆண்டு உலக அழகி ஸ்டெஃபனி டெல் வாலே அவருக்கு மகுடம் சூட்டினார்.
Advertisement
அதோடு 67-ஆவது உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய் முதன்முறையாக பட்டம் வென்றவர் ஆவார். பின்னர் பிரியங்கா சோப்ரா, டயானா ஹெய்டன் உள்ளிட்டவர்கள் இப்பட்டம் வென்றுள்ளனர்.
இதுகுறித்து மானுஷி கூறியதாவது:
சிறுவயது முதலே உலக அழகிப் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. ஆனால், அது நடைபெறும் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. இந்த தருணத்தை எனது வாழ்நாள் முழுவதும் நான் நிச்சயம் மறக்க மாட்டேன் என்றார்.
முன்னதாக, 2017-ம் ஆண்டுக்கான இந்திய அழகி பட்டத்தையும் மானுஷி ஷில்லர் வென்றது குறிப்பிடத்தக்கது. மேலும், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இதனால் தற்போது வரை சுமார் 5,000 பெண்கள் பயனடைந்து உள்ளதாகவும் அதற்காக இறைவனுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் மானுஷி கூறினார்.