முகப்பு
உலகம்

சிங்கப்பூரின் முதல் பெண் அதிபரானார் ஹலிமா யாக்கோப்! 

சிங்கப்பூர் வரலாற்றில் முதன்முறையாக ஹலிமா யாக்கோப் என்னும் பெண் அந்நாட்டு அதிபராகத்  தேர்தெடுக்கப்பட்டுளார்.

Updated On : 13 செப்டம்பர், 2017 at 4:16 PM
பகிர்:

சிங்கப்பூர்: சிங்கப்பூர் வரலாற்றில் முதன்முறையாக ஹலிமா யாக்கோப் என்னும் பெண் அந்நாட்டு அதிபராகத்  தேர்தெடுக்கப்பட்டுளார்.

சிங்கப்பூரின் அரசியல் சட்டத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஒரு திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி நாட்டின் அதிபர் தேர்தலானது ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட ஒரு பாரம்பரிய இனக்குழுவினருக்கு ஒதுக்கப்படுகிறது.  அதன்படி இம்முறை மலாய் இனத்தவருக்கு அதிபர் பதவி ஒதுக்கப்பட்டது.

அதன்படி இம்முறை ஹலிமா யாக்கோப், தொழிலதிபர்கள் மொஹம்மத் சாலே மரிக்கன் மற்றும் பாரீத் கான் ஆகிய மூவரும் களத்தில் இருந்தனர். இவர்கள் மூவரில் ஹலிமாவினைத் தவிர மற்ற  இருவரும் அதிபர் பதவிக்கான குறைந்த பட்ச தகுதிகளை கொண்டிருக்காத காரணத்தால் ஹலிமா போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டார்.

Advertisement

ஹலிமா யாக்கோப் 1954-ஆம் ஆண்டு இந்தியாவினைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய தந்தைக்கும், மலேசியப் பெண்ணுக்கும்  பிறந்தவர். தன்னுடைய அரசியல் பயணத்தினை, சிங்கப்பூரின் பிரபலமான மக்கள் செயல்பாட்டு கட்சியுடன் துவக்கினார். 2011-இல் அந்நாட்டின் அமைச்சரவையில் இணைந்தவர், 2013-ஆம் ஆண்டு நாடாளுமன்ற சபாநாயகரானார்.

நாட்டின் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக விதிமுறைகளின்படி கடந்த மாதம் தன்னுடைய சபாநாயகர் பதவி மற்றும் கட்சியிலிருந்து ராஜிநாமா செய்தார்.

இவரது பதவியேற்பு விழாவானது நாளை காலை அதிபர் மாளிகை மற்றும் அலுவலகம் அமைந்துள்ள இஸ்தானாவில் நடைபெறுமென்று, பிரதமர் லீ சீன் ஹுங் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தெடுக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹலிமா, 'நாட்டின் குடிமக்கள் அனைவரும் தங்களிடையே உள்ள வேற்றுமைகளை மறந்து ஒற்றுமைகளில் கவனம் செலுத்த வேண்டும். மேன்மையை நோக்கி உழைக்க தோளோடு தோள் சேர்க்க வேண்டும் என்று தெரிவித்தார் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.