ராவல்பிண்டி கிராமத்துக்கு மலாலா பெயர்!
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள கிராமத்துக்கு மலாலாவினுடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் ராவல்பிண்டி பகுதியில் அமைந்துள்ள கிராமத்துக்கு மலாலா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதை அப்பகுதியின் சமூக ஆர்வலர் பஷீர் அஹமது தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுஃப்ஸாய் (வயது 20), கடந்த 2012-ஆம் ஆண்டு பெண் கல்விக்கு ஆதரவாகப் பேசி வந்தவரை பள்ளி வாகனத்திலிருந்து இறக்கி, தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், தலையில் குண்டு பாய்ந்து உயிருக்குப் போராடிய மலாலா, விமானம் மூலம் பிரிட்டன் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் பிழைத்தார்.
உலகம் முழுவதும் அதிர்ச்சி அலையை எழுப்பிய இந்தச் சம்பவத்தையடுத்து, மலாலாவுக்கும், அவரது பெற்றோருக்கும் பிரிட்டன் அடைக்கலம் அளித்தது. இந்தச் சூழலில், மலாலாவுக்கு கடந்த 2014-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவின் சமூக சேவகர் கைலாஷ் சத்யார்த்தியுடன் பகிர்ந்து வழங்கப்பட்டது. அந்த வகையில் மிகவும் இளைய வயதில் நோபல் பரிசு பெற்றவர் (அப்போது 17 வயது) என்ற பெருமையையும் மலாலாவுக்குக் கிடைத்தது.
Advertisement
Advertisement
இந்தச் சூழலில், சுமார் 6 ஆண்டுகள் கழித்து தனது தாய்நாடான பாகிஸ்தான் திரும்பினார். மேலும், தாம் பிறந்து வளர்ந்த ஸ்வாத் பள்ளத்தாக்குக்கு பகுதியை பார்வையிட்டு 4 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மீண்டும் லண்டன் திரும்பினார்.