உங்கள் ஜிமெயிலிருந்து உங்களுக்கே அனுப்பப்படும் 'ஸ்பாம்' மின்னஞ்சல்கள்: அதிர்ச்சி தரும் ஆய்வு!
பயனாளர்களின் ஜிமெயில் கணக்கிலிருந்து அவர்களுக்கே 'ஸ்பாம்' மின்னஞ்சல்கள் அனுப்பப்படும் புதிய வகை மோசடி ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சான் பிரான்சிஸ்கோ: பயனாளர்களின் ஜிமெயில் கணக்கிலிருந்து அவர்களுக்கே 'ஸ்பாம்' மின்னஞ்சல்கள் அனுப்பப்படும் புதிய வகை மோசடி ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உலகெங்கும் பரவலாகப் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் சேவைகளில் கூகுளின் ஜிமெயில் சேவை முக்கியமான ஒன்றாகும். பொதுவாக மின்னஞ்சல் பயன்படுத்துவோருக்கு 'ஸ்பாம்' எனப்படும் வணிக நோக்கில் பரவலாக அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் பற்றித் தெரிந்திருக்கும். கூகுளின் ஜிமெயில் சேவையில் இத்தகைய 'ஸ்பாம்' மின்னஞ்சல்களைத் தவிர்ப்பதற்காக, அவற்றின் சர்வர் கணிப்பொறிகளில் ‘ஸ்பாம் பில்டர்கள்’ எனப்படும் முறை பயன்படுத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில் இத்தகைய கட்டுப்பாடுகளையும் மீறி பயனாளர்களின் ஜிமெயில் கணக்கிலிருந்து அவர்களுக்கே 'ஸ்பாம்' மின்னஞ்சல்கள் அனுப்பப்படும் புதிய வகை மோசடி தெரிய வந்துள்ளது.இதுதொடர்பாக 'மஷாபில்' தொழில்நுட்ப இணைய தளத்தில் வெளியாகியிருக்கும் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
Advertisement
Advertisement
சில குறிப்பிட்ட ஜிமெயில் பயனாளர்கள் அவர்களது கணக்கிலிருந்து அவர்களுக்கே 'ஸ்பாம்' விளம்பர மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் ஸ்பாம் பில்டர்களில் இருந்து தப்பும் பொருட்டு, அனுப்பும் முகவரிகளை 'டெலஸ்' எனப்படும், கனடா நாட்டுத் தொலைத்தொடர்பு சேவை நிறுவனத்தில் இருந்து அனுப்பபடுவது போல போலியாக வைத்துக் கொள்கின்றன. அத்துடன் மின்னஞ்சலின் தலைப்பு 'ஆண்களுக்கு உடல் எடையைக் குறைக்கும் வழிகள் மற்றும் மருந்துகள்' என்பதாக அமைந்து இருக்கின்றன.
இவ்வாறு அந்த தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இவ்வாறு ஒரு சிறிய அளவிலான ஜிமெயில் பயனாளர்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்துள்ளதாகவும்,அதை சரிசெய்யும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூகுள் நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதேசமயம் இதன் காரணமாக பயனாளர்களின் கணக்கில் எந்த வித பாதுகாப்பு குறைபாடுகளும் கிடையாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.