முகப்பு
உலகம்

குடியேற்றவாசிகள் விவகாரம்: பிரிட்டன் உள்துறை அமைச்சர் ராஜிநாமா

குடியேற்றவாசிகளை வெளியேற்றுவது தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு தவறான தகவல் அளித்த விவகாரத்தில், பிரிட்டன் உள்துறை அமைச்சர் அம்பர் ரூட்  தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

குடியேற்றவாசிகளை வெளியேற்றுவது தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு தவறான தகவல் அளித்த விவகாரத்தில், பிரிட்டன் உள்துறை அமைச்சர் அம்பர் ரூட்  தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பிரிட்டனின் தொழிலாளர் தேவையை ஈடுசெய்ய மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கானவர்கள் பிரிட்டனுக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கு பிரிட்டன் குடியுரிமையும் வழங்கப்பட்டது.
'விண்ட்ரஷ்' என்ற கப்பல் மூலம் அவர்கள் அழைத்து வரப்பட்டதால், அவர்கள் 'விண்ட்ரஷ் தலைமுறையினர்' என்று அழைக்கப்படுகின்றனர்.
பிரிட்டனின் பன்முகத் தன்மையின் அடையாளமாக விண்ட்ரஷ் தலைமுறையினர் கருதப்பட்டாலும், அவர்களது குடியேற்றத்துக்கு பல்வேறு வலதுசாரி அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இந்தச் சூழலில், தற்போதைய பிரிட்டன் பிரதமர் தெரச மே உள்துறை அமைச்சராக இருந்தபோது, மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட காமன்வெல்த் நாடுகளிலிருந்து குடியேறியவர்களுக்கு எதிரான கொள்கைகள் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, 1973-ஆம் ஆண்டுக்கு முன்னர் பிரிட்டனில் குடியேறிய 'விண்ட்ரஷ்' தலைமுறையினரின் குழந்தைகள், நாட்டில் தொடர்ந்து தங்கியிருப்பதற்கான தகுதியை நிரூபிக்கத் தவறினால், அவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எனினும், இதுகுறித்து நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் உள்துறை அமைச்சர் அம்பர் ரூட் அளித்த விளக்கத்தில், குடியேற்றவாசிகளை வெளியேற்றுவது தொடர்பாக இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
எனினும், இந்த இலக்கு குறித்த அவரது குறிப்பாணையை பிரிட்டன் ஊடகங்கள் அம்பலப்படுத்தின. அதையடுத்து எழுந்த சர்ச்சை காரணமாக, தனது பதவியை அம்பர் ரூட் ராஜிநாமா செய்தார்.
புதிய உள்துறை அமைச்சராக பாகிஸ்தான் வம்சாவளி எம்.பி.
அம்பர் ரூட் ராஜிநாமாவைத் தொடர்ந்து, பிரிட்டன் உள்துறை அமைச்சர் பதவிக்கு பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் ஜாவித் நியமிக்கப்பட்டார். சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் பிரிட்டன் அரசின் குடியேற்றவாசிகள் கொள்கை குறித்து சஜித் ஜாவித் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
1973-ஆம் ஆண்டுக்கு முன்னர் குடியேறியவர்களின் குழந்தைகள் தங்களது குடியுரிமை தகுதியை நிரூபிக்க வேண்டும் என்ற உள்துறை அமைச்சகத்தின் விதிமுறை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து குடியேறியவர்களையும் பாதிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்தச் சூழலில், பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவரை உள்துறை அமைச்சராக பிரதமர் தெரஸா மே நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →