முகப்பு
உலகம்

வங்கதேசத்தில் தொலைக்காட்சி பெண் செய்தியாளர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை 

வங்கதேசத்தில் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரியும் பெண் செய்தியாளர் மர்ம நபர்களால் அவரது வீட்டிலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:37 PM
பகிர்:

டாக்கா: வங்கதேசத்தில் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரியும் பெண் செய்தியாளர் மர்ம நபர்களால் அவரது வீட்டிலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வங்கதேசத்தில் ஆனந்தா டி.வி. என்ற தனியார் செய்தி தொலைக்காட்சி சேனல் ஒன்று செயல்பட்டு வருகிறது.  இங்கு சுபர்ணா நோடி (32) என்பவர் நிருபராக பணியாற்றி வந்துள்ளார். இவர் தலைநகரான டாக்காவில் இருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ள பப்னா மாவட்டத்தில் உள்ள ராதாநகர் பகுதியில் வசித்து வருகிறார்.  கணவரிடம் இருந்து விவாகரத்து பெறக் காத்திருக்கும் இவருக்கு 9 வயதில் மகள் இருக்கிறார். 

இந்நிலையில் செவ்வாய் இரவு 10.45 மணியளவில் சிறிய கும்பல் ஒன்று இரு சக்கர வாகனங்களில் வந்து சுபர்ணா வீட்டு அழைப்பு மணியை அழுத்தியுள்ளது. கதவைத் திறந்து அவர்களுக்கு பதில் அளித்தவரை மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதங்களால் தாக்கி விட்டு கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

இதனையடுத்து அக்கம் பக்கத்தார் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  ஆனால் அவர் வரும் வழியிலேயே மரணம் அடைந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.

தற்பொழுது பல்வேறு குழுக்களை அமைத்து குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் கொலைகாரர்களை உடனடியாக நீதியின் முன் கொண்டு வரவேண்டும் என்று பப்னாவில் உள்ள பத்திரிகையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →