சிட்னி: பப்புவா நியூ கினியா தீவில் நள்ளிரவு 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பப்புவா நியூ கினியா தீவில் நேற்று நள்ளிரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் எங்கா மாகாணத்தின் போர்கெரா பகுதியில் சுமார் 90 கிலோ மீட்டர் (55 மைல்) தொலைவிலும், கடலுக்கு அடியில் 35 கிலோ மீட்டர் ஆழத்திலும் சுமார் 7.5 ரிக்டர் அளவுகோலாக பதிவானது என அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக வீடுகள் குலுங்கியதால் அப்பகுதி மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சிறிது நேரத்துக்கு பிறகு நிலைமை சீரானது. தீவிலுள்ள சில இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டது. ஆனால் சேத விவரங்கள் வெளியாகவில்லை. மேலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.