இலங்கையில் காவலரைக் கொலை செய்ததாக, பெளத்த துறவி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இலங்கையின் தென்கிழக்குப் பகுதியான ரத்னபுராவில் உள்ள கலாண்டா கோவிலில் கொன்வாலனே தம்மசார தேரா என்ற பெளத்த துறவி தனியாக வசித்து வந்தார்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய அவருக்கு நீதிமன்றம் பல முறை அழைப்பாணை அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவரைக் கைது செய்வதற்காக, காவலர் ஒருவர் செவ்வாய்க்கிழமை தனியாகச் சென்றுள்ளார். அப்போது, காவலருடன் வர மறுத்த தேரா, அவரோடு வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார். திடீரெனக் காவலரின் கழுத்தை நெறித்து, அவரை தேரா கத்தியால் குத்தியதாகத் தெரிகிறது.
காவலரின் அலறல் சத்தத்தைக் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர்,தேராவைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவலர் சிகிச்சை பலனின்றி உயரிழந்தார். பெளத்த துறவி ஒருவர், காவலரைக் கொலை செய்திருப்பது இதுவே முதல்முறை என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.