லாகூர்: பாகிஸ்தானில் மதரஸா ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
லாகூரில் முப்தி முகமது உசேன் நயீமி என்ற மத குருவின் நினைவு நாள் நிகழ்ச்சி அங்குள்ள மதரஸா ஒன்றில் ஞாயிறன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்து கொண்டார்.
அவர் பேசுவதற்கு மேடையேறிய பொழுது அவரை நோக்கி பார்வையாளர்களில் ஒருவர் காலணியை வீசினார். இதனால் ஷெரீப் கடும் அதிர்ச்சி அடைந்தார். சுதாரித்த விழா ஏற்பாட்டாளர்கள் காலணி வீசிய நபரை பாய்ந்து சென்று மடக்கிப் பிடித்தனர். அவர் உடனடியாக காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டார்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. அவர் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இந்த சம்பத்திற்குப் பிறகும் நிகழ்ச்சியில் திட்டமிட்டபடி, நவாஸ் ஷெரீப் பேசினார். ஆனால் அவர் தனது பேச்சில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி என்று மட்டும் சுருக்கமாக கூறி, பிரார்த்தனை செய்து விட்டு தனது பேச்சை முடித்துக் கொண்டார்.
இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இந்த சம்பவத்துக்கு, பாகிஸ்தான் அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.