புதுதில்லி: பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் காக்கன் அப்பாஸி நியூயார்க் விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்டது ஏன் என்று அமெரிக்க தூதரக அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தால் பிரதமர் நவாஸ் ஷெரீப் தகுதியிழப்பு செய்யப்பட்ட பின், ஆகஸ்ட் 1 அன்று நாட்டின் 18-வது பிரதமராக ஷாஹித் காக்கன் அப்பாஸி பதவியேற்று கொண்டார்
அவர் சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள நோய்வாய்ப்பட்ட தனது சகோதரியை சந்திக்க தனிப்பட்ட முறையில் பயணம் மேற்கொண்டுள்ளார். எபொழுது நியூயார்க்கில் உள்ள ஜே.எஃப்.கே. சர்வதேச விமான நிலையத்தில் அவர் பயணிகளுக்கான வழக்கமான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இது தொடர்பான காட்சிகளை பாகிஸ்தானின் ஜியோ தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது. அந்த காட்சிகளில் அப்பாஸி பாதுகாப்பு சோதனைகளை முடித்துக் கொண்டு, தனது பை மற்றும் கோட் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு நடந்து வெளியேறும் காட்சி இடம் பெற்று உள்ளது. ஆனாலும் அவர் தானாகவே பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றினார் என்று ஜியோ நியூஸ் கூறியுள்ளது. இது பாகிஸ்தானில் கடும் கொந்தளிப்பை உருவாக்கியது.
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் காக்கன் அப்பாஸி நியூயார்க் விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்டது ஏன் என்று தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் துணை செய்தித்தொடர்பாளர் அலெக்ஸ்சாண்டர் மெக்லாரென் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பான செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் காக்கன் அப்பாஸி தனது அமெரிக்க பயணத்தினை தனிப்பட்ட ஒன்றாக, தூதரக ரீதியிலான ஸ்போர்ட் எதுவும் இல்லாமல் தனிப்பட்ட பாஸ்போர்ட்டில் சென்றுள்ளார். இதன் காரணமாக அவர் சாதாரண குடிமகனாகவே கருதப்படுவார். எனவே எனக்கும் உங்களுக்கும் பொருந்தக்கூடிய எல்லா விதமான பாதுகாப்பு நடைமுறைகளும் அவருக்கும் பொருந்தும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.