டமாஸ்கஸ்: சிரியாவில் அரசுக்கு ஆதரவான கூட்டுப் படைகளுக்கும் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையேயான சண்டையில் 35 ராணுவ வீரர்கள் பலியாகினர்.
சிரியாவில் அரசுக்கு ஆதரவான கூட்டுப் படைகளுக்கும் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து கடும் சண்டை நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற சண்டையில் கூட்டுப்படையினர் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆக்கிரமிப்பில் இருந்த கடைசி நகரையும் கைப்பற்றினர்.
டெய்ர் அல்-சோர் மாகாணத்தில் உள்ள மயாதின் நகரில் சிரியா மற்றும் ரஷியாவை சேர்ந்த ராணுவ வீரர்கள் ஞாயிறன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 35 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 26 பேர் சிரியாவை சேர்ந்தவர்கள் எனவும், 9 பேர் ரஷியாவை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.
அதேசமயம் இந்த துப்பாக்கிச் சண்டையில் 43 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த பகுதியில் உள்ள அரசு ஆயுதக் கிடங்கை குறிவைத்து சில பயங்கரவாதிகள் சனிக்கிழமையிரவு நடத்திய தாக்குதலில் நான்கு ரஷிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.