ரியோ டீ ஜெனிரோ: பிரேசிலின் ரியோ டீ ஜெனிரோ நகரில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான அருங்காட்சியகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அரிய கலைப்பொருட்கள் நாசமாகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரேசிலின் ரியோ டீ ஜெனிரோ நகரில் 200 ஆண்டுகள் பழமையான அருங்காட்சியகம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு பல்வேறு கலை பொருட்கள் மற்றும் ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஞாயிறு இரவு அங்கு தீப்பிடித்ததில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பொருட்கள் எரிந்து சாம்பலாகியதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தீ விபத்து குறித்து அருங்காட்சியகத்தின் துணை இயக்குநர் செய்தி நிறுவனங்களிடம் கூறியதாவது:
எங்களுக்கு இது ஒரு தாங்க முடியாத பேரிழப்பு. லத்தீன் அமெரிக்காவிலேயே மிகப் பெரிய அருங்காட்சியகம் இதுதான். நாங்கள் மதிப்பிட முடியாத பல்வேறு பொருட்களை இங்கு சேகரித்து வைத்திருத்தோம். அவை அனைத்தும் நூறு வருடங்கள் பழமை வாய்ந்தது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.