நியூயார்க் அமெரிக்காவில் 'கிரீன் கார்டு' எனப்படும் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் வந்து குடியேறி, குறிப்பிட்ட கால அளவு தங்கி 'கிரீன் கார்டு' எனப்படும் நிரந்தர குடியுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தவாறே உள்ளது. இதைக் கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 'கிரீன் கார்டு' பெறுவதற்கான புதிய விதிமுறைகளை அரசு தற்போது அறிவித்துள்ளது. அவற்றில் குறிப்பிடத்தக்க விதிகளாவன:
அமெரிக்காவில் 'கிரீன் கார்டு' பெற்று குடியேறுவதற்கு இந்தியா உட்பட மற்ற நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அதிகபட்ச வருமானம் இருக்க வேண்டும்.
அவர்கள் அனைவரும் அரசின் மருத்துவக் காப்பீட்டு, ரேஷன் மானியம் போன்ற நலத்திட்டங்களை சார்ந்திருக்காதவர்களாக இருக்க வேண்டும்.
அரசின் இத்தகையாய விதிமுறைகளின் காரணமாக குறைந்த அளவு வருமானத்துடன் 'கிரீன் கார்டுக்கு' விண்ணப்பிக்கும் ஏராளமான பிறநாட்டினர் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
மறைமுகமாக அமெரிக்கர்களுக்கே அரசின் நலத்திட்டங்கள் அதிக அளவில் சென்றடையும் என்றும் அமெரிக்காவில் வந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்றும் அந்நாட்டு அரசு எதிர்பார்ப்புகளை வெளியிட்டுள்ளது.