இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனாவைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்ட இந்தியரை அந்நாட்டு நீதிமன்றம் விடுவித்துள்ளது.
அதிபர் மைத்ரிபால சிறீசேனாவைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக நமல் குமாரா என்ற காவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில், கேரளத்தைச் சேர்ந்த மார்செலி தாமஸ் என்பவரை அந்நாட்டு காவல் துறை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்தது. இந்த விவகாரம் குறித்து அவரிடம் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த வழக்கு மீது கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடந்த 13-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, தன் மீது பொய்யாகக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தாமஸ் தெரிவித்தார். இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டுள்ள நபருக்கு எதிராக உள்ள ஆவணங்களை அளிக்குமாறு அந்நாட்டின் புலனாய்வு அமைப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை மாஜிஸ்திரேட் நீதிபதி ரங்கா திஸ்ஸநாயகே முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மார்செலி தாமஸுக்கு எதிரான ஆவணங்களைப் புலனாய்வு அமைப்பினர் தாக்கல் செய்யவில்லை என்று கூறிய நீதிபதி, அவரை வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டார்.
எனினும், உரிய ஆவணங்கள் ஏதுமின்றி இலங்கையில் தங்கியிருந்த குற்றத்துக்காக அந்நாட்டுக் காவல் துறையினர் அவரை மீண்டும் கைது செய்தனர்.