மலேசிய விமான நிலையத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வடகொரிய அதிபர் கிம் ஜோங்- உன்னின் சகோதரர் கிம் ஜோங்-நாம் (45), அமெரிக்காவின் சிஐஏ உளவாளி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிம் ஜாங்-நாம், கடந்த 2017-ஆம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையம் சென்றிருந்தபோது, அவரது முகத்தில் நச்சு ரசாயனத்தை இரண்டு பெண்கள் வீசினர். அதைக் கண்ட விமான நிலைய அதிகாரிகள், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். எனினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார்.
வடகொரிய அதிகாரிகளின் உத்தரவின்பேரில் இந்த சம்பவம் நிகழ்த்தப்பட்டதாக தென்கொரியா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இந்தோனேஷியா மற்றும் வியத்நாமைச் சேர்ந்த பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரையும் இந்த ஆண்டு மலேசிய அரசு விடுவித்தது.
இந்நிலையில், கிம் ஜாங்-நாம், அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்புக்கு தகவல்களை அளித்து வந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக அமெரிக்க ஊடகங்களில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
வடகொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜாங்-நாம், பெரும்பாலும் மற்ற நாடுகளிலேயே அதிகம் வசித்துள்ளார். சீனாவுக்கு அருகில் உள்ள மகாவு பகுதியில் அவர் அதிகம் தங்கியுள்ளார். அவர் வடகொரியா குறித்த தகவல்களை வெளிநாடுகளுக்கு தெரிவித்து வந்துள்ளார். குறிப்பாக சீனாவுக்கு அதிக தகவல்களை வழங்கியுள்ளார்.
அவருக்கும், சிஐஏ அமைப்புக்கும் இடையேயான உறவுகள் குறித்து தெளிவாக தெரியவில்லை. ஆனால், சிஐஏ அதிகாரிகளை அவர் பல முறை சந்தித்து பேசியுள்ளார்.
சிஐஏ அதிகாரியை சந்தித்து பேசுவதற்காக மலேசியா சென்றிருந்தபோதே அவர் கொலை செய்யப்பட்டார் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.