முகப்பு
உலகம்

வரி உயர்த்தினாலும் அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தை தொடரும்: அடிபணிகிறதா சீனா?

20,000 கோடி டாலர் மதிப்பிலான மீதமுள்ள சீனப் பொருள்களுக்கு அமெரிக்கா கூடுதல் இறக்குமதி வரி விதித்துள்ளது வர்த்தகப் போர் வெடிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 11 மே, 2019 at 11:07 AM
பகிர்:

அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்கெனவே எச்சரித்திருந்தபடி, 20,000 கோடி டாலர் (சுமார் ரூ.14 லட்சம் கோடி) மதிப்பிலான மீதமுள்ள சீனப் பொருள்களுக்கு அமெரிக்கா கூடுதல் இறக்குமதி வரி விதித்துள்ளது.

இதன்காரணமாக சீனாவிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்வோருக்கு இதுவரை விதிக்கப்பட்ட 10 சதவீத வரி, தற்போது 25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தங்கள் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டால், அதற்குப் பதிலடியாக அமெரிக்கப் பொருள்களுக்கும் இறக்குமதி வரி உயர்த்தப்படும் என்று சீனா எச்சரித்துள்ள நிலையிலும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

இது, உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் வெடிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு சீனா தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே இருநாடுகளின் வர்த்தகம் தொடர்பான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை பெய்ஜிங்கில் நடைபெறும் என்று சீனா சனிக்கிழமை கூறியுள்ளது.

முன்னதாக, அமெரிக்காவுடனான வர்த்தகப் போர்ப் பதற்றத்தைத் தணிப்பதற்கான பேச்சுவார்த்தையில் பங்கேற்க, சீன துணை பிரதமர் லியூ ஹே தலைமையிலான தூதுக் குழு அமெரிக்க தலைநகர் வாஷிங்டனை வியாழக்கிழமை வந்தடைந்தது. இந்தச் சூழலிலும், சீனப் பொருள்கள் மீது அமெரிக்கா கூடுதல் இறக்குமதி வரி விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.