பாகிஸ்தான் அரசு மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர சீனா தான் உதவியதாக அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார். இதுதொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வெளியுறவுத்துறை கூட்டமைப்புத் தலைவர் ரிச்சர்ட் என். ஹாஸ் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது கூறுகையில்,
கடந்த 13 மாதங்களுக்கு முன் எனது தலைமையிலான அரசு பதவியேற்ற போது, பாகிஸ்தான் மோசமான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்துக்கொண்டிருந்தது. அப்போதையச் சூழலில் மிகப்பெரிய அளவிலான பொருளாதார நிதியுதவி அளித்து சீனா தான் உதவியது. சீனா எங்களுக்கு அளித்திருப்பது நிதி ஆதாரம் மட்டுமல்ல, வாய்ப்பும் தான்.
பாகிஸ்தான், சீனா இடையிலான வர்த்தகம் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் 2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு முதலீடு செய்துள்ளது. இதன்மூலம் ஆசியான் நாடுகளுக்கு இணையாக அதே கொள்கை முறையில் பாகிஸ்தானில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.
பெரும்பாலான சீன நிறுவனங்கள் பாகிஸ்தானில் வர்த்தகம் தொடங்க முன்வருகின்றன. தொழில்நுட்பங்கள் கொண்டு வரப்படுகின்றன. மேலும் பாகிஸ்தானின் எதிர்கால நிதிநிலையை சமாளிக்கும் விதமாக மேலும் 6 பில்லியன் டாலர்கள் நிதியுதவி வழங்கியுள்ளது என்று தெரிவித்தார்.