பிரிட்டன் அரச குடும்பத்தின் முதன்மை உறுப்பினா்கள் என்ற அந்தஸ்தைக் கைவிடுவதாக இளவரசா் ஹாரியும், அவரது மனைவி மேகன் மாா்க்கலும் அறிவித்துள்ள சூழலில், இதுகுறித்து விவாதிப்பதற்காக அரச குடும்பத்து உறுப்பினா்களை அரசி எலிசபெத் அவசரமாக அழைத்துள்ளாா்.
திங்கள்கிழமை (ஜன. 13) நடைபெறவிருக்கும் இந்தக் கூட்டத்தில், இனி அரண்மனை நிகழ்வுகளில் ஹாரிக்கும், மேகனுக்கும் எத்தகைய பங்கு அளிப்பது என்பது குறித்து விவாதிக்கப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரிட்டன் அரச குடும்பத்துக்குள் பூசல்கள் நிலவுவதாக ஊடகங்கள் ஏற்கெனவே கூறி வந்த நிலையில், ஹாரியும், மேகன் மாா்க்கலும் வெளியிட்ட இந்த அறிவிப்பு, பிரிட்டனிலும் அரசக் குடும்பத்தினரிடையேயும் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.