உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.20 கோடியை எட்டுகிறது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5,46,720 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல நாடுகளை முடக்கிப்போட்டுள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலை அடுத்து 3 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தநிலையில் உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஜூலை 8-ம் தேதி காலை நிலவரப்படி 1,19,54,944 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 5,46,720 ஆக உள்ளது. இதுவரை 69 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 45 லட்சம் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 58 ஆயிரம் பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
அமெரிக்காவில் அதிகபட்சமாக 30,97,084 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,33,972 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் 16,74,655 பேருக்கு கரோனா பாதித்து, 66 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் 7,43,481 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20,653 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.