ஜப்பானில் அவசர நிலை முழுவதுமாக நீக்கம்: பிரதமர் சின்சோஅபே
கரோனா தொற்று காரணமாக ஜப்பானில் அறிவிக்கப்பட்டிருந்த அவசர நிலை முழுவதுமாக நீக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் சின்சோ அபே அறிவித்துள்ளார்.
டோக்யோ: கரோனா தொற்று காரணமாக ஜப்பானில் அறிவிக்கப்பட்டிருந்த அவசர நிலை முழுவதுமாக நீக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் சின்சோ அபே அறிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றின் காரணமாக கடந்த மாதம் 7-ஆம் தேதி முதல் ஜப்பானில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. முன்னதாக தொற்றுப் பாவலை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் காரணமாக, பிரதமர் சின்சோ அபே இந்த நடவடிக்கையை எடுத்திருந்தார்.
பின்னர் நோய்த்தொற்றின் தீவிரம் கணிசமான அளவு குறையத் துவங்கியவுடன், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மே மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டன. ஆனாலும் டோக்யோ, சிபா, கனகவா மற்றும் சிடமா, வடக்கு ஹொக்கைடோ மாகாணங்களில் அவசர நிலைக் கட்டுப்பாடுகள் நீடித்து வந்தது.
Advertisement
இந்நிலையில் கரோனா தொற்று காரணமாக ஜப்பானில் அறிவிக்கப்பட்டிருந்த அவசர நிலை முழுவதுமாக நீக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் சின்சோ அபே அறிவித்துள்ளார்.
திங்களன்று தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய அவர் இதனை அறிவித்தார். அவசர நிலையை நீக்குவதற்காக கடுமையான தரக் கட்டுபாடுகளை நிர்ணயம் செய்திருந்ததாகவும், நாடு தற்போது அதனை எட்டிவிட்டதால், அவசர நிலை முழுவதுமாக நீக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
திங்கள் நிலவரப்படி ஜப்பானில் 16,550 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் 820 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.