அமெரிக்காவில் உச்சத்தைத் தொட்ட கரோனா பாதிப்பு: ஒரேநாளில் 1,45,000 பேருக்கு தொற்று உறுதி
அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,45,000 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,45,000 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இங்கு நாளுக்கு நாள் பாதிப்பு, உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக ஒருநாள் சராசரி பாதிப்பு 1 லட்சம் என்ற அளவில் உள்ளது.
இந்நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் (புதன்கிழமை) 1,45,000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 1,400 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் 1,04,000 என்பதே அதிகபட்ச ஒருநாள் பாதிப்பாக இருந்தது.
Advertisement
நாள் ஒன்றுக்கு 1 லட்சம் பேர் வரையில் பாதிக்கப்படுவதால் அங்கு மருத்துவ சிகிச்சைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் இடம் இல்லாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தற்போது அங்கு குளிர்காலம் என்பதால் வரும் நாள்களில் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 10.4 மில்லியன் (1.04 கோடி) மற்றும் பலி 2.41 லட்சமாக உள்ளது.
அமெரிக்காவில் இரண்டாம் கரோனா அலை காரணமாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சமீபத்தில், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், அமெரிக்காவில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த சிறப்பு மருத்துவக் குழுவை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.