காத்மாண்டு: நேபாள நாட்டின் தூரமேற்கில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர், 34 பேர் காயமடைந்தனர்.
விபத்து குறித்து காவல் துறையினர் கூறியதாவது:
நேபாளத்தின் தார்சுலா மாவட்டம் மகேந்திரநகர் நோக்கி வியாழக்கிழமை இரவு பயணிகள் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்து, பைதாடி மாவட்டத்தில் தஷ்ரத் சந்த் நெடுஞ்சாலையில் கோத்பே என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையை விட்டு விலகி சுமார் 500 மீட்டர் தொலைவில் ஒரு செங்குத்தான திருப்பத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்து குறித்து தகவல் அறிந்த நிகழ்விடத்திற்கு வந்த பொதுமக்கள் மற்றும் காவலர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 7 ஆண்கள், 2 பெண்கள் என 9 பேர் உயிரிழந்தனர். 34 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
காலை 8 மணி நிலவரப்படி, பேருந்தில் இருந்து எட்டு சடலங்களை மட்டுமே காவலர்கள் மீட்க முடிந்தது.
காயமடைந்த 34 பயணிகளில், பலத்த காயமடைந்த 7 பேர் மேல் சிகிச்சைக்காக தங்கடிக்கி அனுப்பப்பட்டுள்ளனர், 27 பேர் ததேல்துரா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.