அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது. அங்கு 10 லட்சம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது. கலிபோர்னியாவில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்தது.
உலகம் முழுக்க கரோனா பரவிவரும் நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மகாணத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கரோனா பாதிப்பில் அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்திற்குப் பிறகு கலிபோர்னியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
Advertisement
கரோனா பரவலின் ஆரம்ப காலகட்டத்தில் மக்கள் வீடுகளில் இருந்ததால் கலிஃபோர்னியாவில் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் அவ்வப்போது அளிக்கப்பட்ட தளர்வுகளால் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது.
தற்போது அனைத்து மாகாணங்களிலும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், விடுமுறை நாள்களில் மக்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், நிகழ்ச்சிகளில் ஒன்றுகூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மாகாண சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மசாசூசெட்ஸ் மாகாணத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
பலரது இறப்பிற்கான காரணம் தெரியாததால், அதிகாரப்பூர்வமான கரோனா பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
நியூ யார்க், டெக்சாஸ், கலிபோர்னியா, நியூ ஜெர்ஸி மற்றும் புளோரிடா மாகாணங்களைத் தொடர்ந்து கரோனா பலி எண்ணிக்கையில் மசாசூசெட்ஸ் 6-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இதேபோன்று மிச்சிகன் மாகாணத்திலும் கரோனா பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆளுநர் கிரிட்சென் வைட்மர் தெரிவித்துள்ளார்.
கடந்த 7 நாள்களில் மட்டும் பாதிக்கப்பட்டோரில் 10 சதவிகிதம் பேர் உயிரிழந்த நிலையில், கரோனாவிற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால், கிறிஸ்துமஸுக்குள் பலி எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தலாம் என்று கூறினார்.
கரோனா தொற்று அதிகரிப்பால் சிகாகோ நகரின் பொது இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் கூடுவதற்கு நகர மேயர் லோரி லைட்ஃபுட் தடை விதித்துள்ளார்.
வரும் திங்கள் கிழமை முதல் இந்த உத்தரவு அமலுக்கு வரும் என்றும், அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் அலுவலகப் பணிகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வரவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.