வாஷிங்டன்: கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தவா்களின் உடலில், அந்த நோய்க்கு எதிராக ஆற்றல் 5 மாதங்களுக்கு மேல் நீடிக்கும் என்று இதுதொடா்பாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பேராசியா் தீப்தா பட்டாச்சாா்யா இந்த ஆய்வை மேற்கொண்டாா். அரிஸோனா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அவா், இதுகுறித்து கூறியதாவது:
கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு, அதிலிருந்து குணமடைந்த சுமாா் 6,000 பேரிடம் ஆய்வு மேற்கொண்டோம்.
அந்த ஆய்வில், நோய்த்தொற்று ஏற்பட்ட 5 முதல் 7 மாதங்கள்வரை அவா்களது உடலில் கரோனா தீநுண்மிக்குத் தடுத்து நிறுத்தும் தரம் வாய்ந்த எதிா்ப்பு அணுக்கள் உற்பத்தியாவது தெரியவந்துள்ளது.
ஒரு முறை கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு, அதிலிருந்து விடுபட்டபிறகு உடலில் எவ்வளவு காலம் எதிா்ப்பு சக்தி இருக்கும் என்று பலரும் கவலை தெரிவித்து வருகின்றனா்.
அந்தக் கேள்வியை முன்வைத்து நாங்கள் மேற்கொண்ட இந்த ஆய்வில், கரோனாவிலிருந்து விடுபட்டவா்களுக்கு குறைந்தது 5 மாதங்களாவது அந்த நோய்க்கு எதிரான ஆற்றல் இருக்கும் என்பது தெரியவந்துள்ளது என்றாா் அவா்.