வாஷிங்டன்: இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லுறவு ஒப்பந்தம், அடுத்த வாரம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கையெழுத்தாகவுள்ளது.
இதுகுறித்து வாஷிங்டனில் அதிகாரிகள் கூறியதாவது:
இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையிலான நல்லுறவு ஒப்பந்தம், வெள்ளை மாளிகையில் வரும் 15-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியொன்றில் கையெழுத்தாகவிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான குழு, ஐக்கிய அரபு அமீரக பட்டத்து இளவரசரின் சகோதரரும், வெளியுறவுத் துறை அமைச்சா் ஷேக் அப்துல்லா பின் ஜாயெத் அல் நஹ்யான் தலைமையிலான குழு ஆகியவை பங்கேற்கவிருக்கின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே தூதரக நல்லுறவை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா அண்மையில் அறிவித்தது.மூன்று நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நடைபெற்று வந்தப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதிகளை தங்களுடன் இணைக்கும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது.இந்த ஒப்பந்தத்தின் மூலம், இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தியுள்ள முதல் வளைகுடா நாடாகவும், மூன்றாவது அரபு நாடாகவும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியுள்ளது.
இதற்கு துருக்கி, ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. எனினும், பாலஸ்தீன பிரச்னைக்கு தீா்வு காண்பதில் இந்த ஒப்பந்தம் சாதகமான சூழலை ஏற்படுத்தும் என்று அமெரிக்காவும், ஐக்கிய அரபு அமீரகமும் கூறி வருகிறது.இந்த நிலையில், வரலாற்று சிறப்பு மிக்க அந்த ஒப்பந்தம் வெள்ளை மாளிகையில் அடுத்த வாரம் கையெழுத்தாகும் என்று தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.