முகப்பு
உலகம்

கரோனாவில் உதவிய கியூபாவை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கும் தென்னாப்பிரிக்கா

கரோனா தொற்று காலத்தில் தங்களது நாட்டிற்கு உதவியதற்காக கியூபா மருத்துவக் குழுவை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க தென்னாப்பிரிக்கா முடிவு செய்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
கோப்புப்படம்
பகிர்:

கரோனா தொற்று காலத்தில் தங்களது நாட்டிற்கு உதவியதற்காக கியூபா மருத்துவக் குழுவை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க தென்னாப்பிரிக்கா முடிவு செய்துள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கரோனா தொற்று காரணமாக பல்வேறு நாடுகள் முடங்கின. தொற்று பரவல் காரணமாக நாடுகளுக்கிடையே போக்குவரத்து தடை செய்யப்பட்ட நிலையில் மக்களும் வெளியில் நடமாடாமல் இருக்க அறிவுறுத்தப்பட்டனர். 

இந்நிலையில் தொற்று பாதித்த தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு உதவும் வகையில் கியூபா ஏறத்தாழ 3,700 மருத்துவர்களை அனுப்பி வைத்தது. கியூபா நாட்டின் இந்த நடவடிக்கை பலரது பாராட்டுகளையும் பெற்றது. 

இந்நிலையில் தென்னாப்பிரிக்க நாட்டின் அதிபர் சிரில் ரமபோசா, கியூப அரசு மற்றும் மக்களின் தன்னலமற்ற உதவியை அங்கீகரிக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு கியூப மருத்துவக் குழுவைப் பரிந்துரைக்க தென்னாப்பிரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.

பேரிடர் மற்றும் தீவிர தொற்றுநோய் பரவிய காலங்களில் கியூப மருத்துவர்களின் ஹென்றி ரீவ் பன்னாட்டு குழுவை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கும் திட்டத்திற்கு தென்னாப்பிரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என சிரில் ரமபோசா தெரிவித்தார்.

தென்னாப்பிரிக்காவில் மட்டும் 38 ஆயிரம் பேருக்கு கியூப மருத்துவக்குழு சிகிச்சையளித்ததைக் குறிப்பிட்ட தென்னாப்பிரிக்க அதிபர் ஒற்றுமை மற்றும் மனிதநேயத்தின் வெளிப்பாடான கியூபாவின் நடவடிக்கைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக ரமபோசா கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.