ஜெர்மனியில் பீட்சா விநியோகம் செய்யும் ஆப்கன் முன்னாள் அமைச்சர்
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் சையத் அகமது ஜெர்மனியில் உணவு விநியோகம் செய்யும் படங்கள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் சையத் அகமது சதத் ஜெர்மனியில் பீட்சா விநியோகம் செய்யும் படங்கள் வெளியாகியுள்ளன.
தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அந்நாட்டில் வசித்து வந்த உயர் அதிகாரிகள் முதல் மக்கள் வரை அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். தங்களது சொந்த நாட்டை விட்டு பிற நாடுகளுக்கு அகதிகளாக மக்கள் இடம்பெயர்ந்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஜெர்மனியில் குடியேறிய ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சர் சையத் அகமது சதத் பிரபல தனியார் நிறுவனத்தின் பீட்சா விநியோகம் செய்யும் பணியைச் செய்யும் படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளன.
சைக்கிளில் சென்று பீட்சா விநியோகிக்கும் அவர் வறுமை காரணமாக இந்த வேலையை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தொலைதொடர்பு மற்றும் மின்னணுவியலில் முதுகலைப் பட்டம் பெற்றள்ள சதத் 20 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்.
2005 முதல் 2013ஆம் ஆண்டுவரை ஆப்கன் அரசின் தகவல் தொலைதொடர்புதுறை அமைச்சகத்தின் ஆலோசகராக இருந்த சதத் கடந்த 2018ஆம் ஆண்டு அமைச்சரவையில் இடம்பெற்றார். அதன்பிறகு ஆப்கன் அதிபராக இருந்த அஷ்ரப் கனியுடனான கருத்து வேறுபாடு காரணமாக தனது பதவியை 2020ஆம் ஆண்டு ராஜிநாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.