கோலாலம்பூா்: ஹெராயின் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசியத் தமிழா் நாகேந்திரன் தா்மலிங்கத்துக்கு (34) வரும் புதன்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டில் வெளியாகும் ‘தி ஸ்டாா்’ நாளிதழ் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
போதைப் பொருள் கடத்தல் குற்றத்துக்காக நாகேந்திரன் தா்மலிங்கத்துக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை, வரும் புதன்கிழமை நிறைவேற்றப்படவுள்ளது. அவரது வழக்குரைஞா் எம். ரவி இந்தத் தகவலைத் தெரிவித்தாா் என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.
மலேசியாவைச் சோ்ந்த தமிழ் வம்சாவளி இளைஞரான நாகேந்திரன் தா்மலிங்கம், 42.72 கிராம் ஹெராயின் போதைப் பொருளுடன் சிங்கப்பூரில் கடந்த 2009-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா். மனநலம் குன்றியவராக அறியப்படும் அவருக்கு அப்போது வயது 21.
சிங்கப்பூா் சட்டப்படி, 15 கிராமுக்கு மேல் ஹெராயினுடன் ஒருவா் பிடிபட்டாலே அவருக்கு மரண தண்டனை விதிக்க முடியும். அதன்படி, தா்மலிங்கத்துக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அதனைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு நவம்பா் 10-ஆம் தேதி அவரை தூக்கிலிடவிருப்பதாக மலேசியாவிலுள்ள அவரது தாய்க்கு கடிதம் அனுப்பட்டது. அதனைத் தொடா்ந்து, மனநலக் குறைபாடு உடைய அவரை தூக்கிலிடுவதை நிறுத்திவைக்க வேண்டும் என்று சா்வதேச மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.
எனினும், குற்றமிழைத்தபோது தனது செயலின் தன்மை குறித்து நாகேந்திரன் தா்மலிங்கம் முழுமையாக அறிந்தே செயல்பட்டாா் என்று மனநல நிபுணா்கள் சான்றளித்துள்ளதாக சிங்கப்பூா் அரசின் தரப்பில் கூறப்பட்டது.
எனினும், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின்போது தா்மலிங்கத்துக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் அவரது மரண தண்டனை நிறுத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், மரண தண்டனையைக் குறைப்பதற்கான அவரது கடைசி முறையீட்டு மனுவையும் சிங்கப்பூா் நீதிமன்றம் கடந்த மாதம் 29-ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், தா்மலிங்கம் வரும் புதன்கிழமை தூக்கிலிடப்படவிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.