பெய்ஜிங்: தலைநகர் பெய்ஜிங்கில், கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் மரணம் அடைந்ததாக சீனாவின் சுகாதார அதிகாரிகள் திங்கள்கிழமை அறிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் கரோனா அலை மீண்டும் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், பல வாரங்களுக்குப் பிறகு, கரோனாவுக்கு இரண்டு பேர் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க.. அஃப்தாப் பாணியில் கொலை: மனைவியை 50 துண்டுகளாக வெட்டி வீசியவரைக் காட்டிக்கொடுத்த நாய்கள்
கடந்த 4ஆம் தேதிக்குப் பிறகு சீனாவில் கரோனாவுக்கு யாரும் பலியானதாக சுகாதாரத் துறை அறிவிக்கவில்லை. ஒரு பக்கம் நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து, அதனைத் தடுக்க நாடு பல கட்டுப்பாடுகளை அறிவித்து. அதற்கெதிராக நாட்டு மக்கள் கிளர்த்தெழுந்த நிலையில், கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்பட்டன.
கரோனா பரிசோதனைகள் குறைக்கப்பட்டதால், நாட்டில் உண்மையான கரோனா பாதிப்பு நிலவரம் தெரியவராமல் போனது. பல இடங்களில் கரோனாவுக்கு பலியானோரின் உடல்கள் தகன மையங்களுக்கு வந்து கொண்டிருப்பதாக புகைப்படங்கள் பகிரப்பட்டாலும், கடந்த சில வாரங்களாக சீனத்தில் கரோனாவுக்கு யாரும் பலியாகவில்லை என்பதே அந்நாட்டு அரசின் தகவல்.
மற்ற நாடுகளைக் காட்டிலும் சீனத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இதுவரைக் காட்டப்பட்டுள்ளது. இதுவரை சீனாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3.80 லட்சம், மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 5,237 ஆகக் கூறப்படுகிறது.
ஆண்டு இறுதியில், குறிப்பாக நவம்பர் மாதத்தில் சீனாவில் கரோனா அலை அதிகரிக்கத் தொடங்கியிருப்பது, மீண்டும் உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு பரவத் தொடங்குமோ என்ற அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.