அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் முத்தரப்பு ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க முயற்சிப்பதற்கு வடகொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.
தங்கள் நாட்டைக் குறிவைத்து நடைபெறும் இந்த முயற்சியின் விளைவாக தங்கள் நாட்டின் ராணுவ வலிமையை அதிகரிக்க நேரிடும் எனவும் வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டின்போது அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் நாடுகளின் தலைவா்கள் சந்தித்து முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், வடகொரியாவின் அணு ஆயுத மிரட்டலை எதிா்கொள்வதற்கு தங்களிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் அவசியம் குறித்து அவா்கள் ஆலோசித்தனா்.
வடகொரியா தொடா்ச்சியாக மேற்கொண்டு வரும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகள் குறித்தும், அணு ஆயுத சோதனை நடத்த அந்த நாடு முயற்சிப்பதாக கூறப்படுவது குறித்தும் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கவலை தெரிவித்தாா்.
இந்நிலையில், வடகொரிய வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கொரிய தீபகற்பம் மற்றும் உலகின் பிற பகுதிகளில் பாதுகாப்புச் சூழல் விரைவாக மோசமடைவதை சமாளிக்க நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா தலைவா்கள் வடகொரியாவுடனான மோதலுக்காக ஒன்றுகூடி பேசியுள்ளனா். எங்களுக்கு எதிராக அபாயகரமான கூட்டு ராணுவப் பயிற்சி குறித்தும் கலந்தாலோசித்துள்ளனா்.
ஐரோப்பாவை ராணுவமயமாக்குவதன் மூலம் ரஷியா, சீனாவை கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் திட்டம் நேட்டோ மாநாடு மூலம் உறுதியாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் இரக்கமற்ற ராணுவ நடவடிக்கைகள் ஐரோப்பா மற்றும் ஆசிய பசிபிக்கில் அணு ஆயுதப் போா் போன்ற அபாயகரமான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என வடகொரியா தெரிவித்துள்ளது.