அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கரோனா தொற்றால் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை வெள்ளை மாளிகை தனது சுட்டுரைப் பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனால் அவர் தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாக வெள்ளை மாளிகை மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு (79) கடந்த 21ஆம் தேதி கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார். மருத்துவர்கள் தொடர்ந்து அவரை கண்காணித்து வந்ததன் எதிரொலியாக கடந்த 27ஆம் தேதி தொற்றிலிருந்து குணமடைந்ததாக வெள்ளை மாளிகை அறிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனை வெள்ளை மாளிகை மருத்துவர் கெவின் ஓகானர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
அறிகுறிகள் ஏதும் இல்லை என்றும், அவரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.