பழமை வாய்ந்த மரத்திற்கு அருகே நிர்வாண போட்டோ ஷூட்; தம்பதியரை வெளியேற்றும் இந்தோனேசியா
சமூக வலைதள பிரபலமான அலினா ஃபஸ்லீவா, கோயிலுக்கு அருகே உள்ள 700 ஆண்டு பழமை வாய்ந்த மரத்தின் மேலே நின்று நிர்வாணமாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இந்தோனேஷியா பாலியில் தபானன் மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள புகழ்பெற்ற கோயிலில் 700 ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரத்திற்கு அருகே நின்று நிர்வாணமாக புகைப்படம் எடுத்து கொண்ட சமூக வலைதள பிரபலமான அலினா ஃபஸ்லீவா, அவரது கணவர் ஆகியோர் பாலியில் இருந்து வெளியேற்றப்படுவர் என உள்ளூர் அரசு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
புனிதமாக கருதப்படும் மரத்திற்கு அருகே நிர்வாணமாக புகைப்படம் எடுத்து கொண்டது உள்ளூர் கலாசாரத்திற்கு எதிரானது என அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். கணவர் ஆண்ட்ரே ஃபஸ்லீவால் எடுக்கப்பட்ட நிர்வாண புகைப்படத்தை அலினா இன்ஸ்டாகிராமில் பகிர, அது வைரலானது. இது, பாலி இன மக்களை கோபப்படுத்தியுள்ளது.
பாலி இன இந்து கலாசாரத்தின்படி, மலைகள், மரங்கள் மற்றும் பிற இயற்கை வளங்கள் புனிதமாக கருகப்படுகிறது. இயற்கை வளங்களில் கடவுள் இருப்பதாக இம்மக்கள் நம்புகின்றனர்.
Advertisement
இதையும் படிக்க | அமித் ஷாவுக்கு விருந்தளித்த கங்குலி; அரசியல் நகர்வின் முன்னோட்டமா?
இதுகுறித்து பாலி குடியேற்றத்துறை தலைவர் ஜமருலி மணிஹுருக் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கணவன், மனைவி இருவரும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், உள்ளூர் விதிமுறைகளை மதிக்காத வகையிலும் செயல்பட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்படும்.
அவர்கள் குறைந்தது ஆறு மாதங்களுக்கு இந்தோனேசியாவிற்கு வர தடை செய்யப்படுவார்கள். மேலும், உள்ளூர் மக்களின் நம்பிக்கையின்படி புனிதமாக கருதப்படும் பகுதியில் நடைபெறும் தூய்மைப்படுத்தும் விழாவில் அவர்கள் பங்கேற்க வேண்டும்" என்றார்.
நிர்வாணமாக புகைப்படம் எடுத்ததற்கு இன்ஸ்டாகிராமில் மன்னிப்பு கேட்ட அலினா, "பாலியில் பல புனிதமாக இடங்கள் உண்டு. அது புனிதமானது என எடுத்துரைக்கும் வகையிலான பலகைகள் வைக்கப்படுவதில்லை. மேலும், இந்த இடங்களையும் மரபுகளையும் மதிப்புடன் நடத்துவது மிகவும் முக்கியம். நான் தவறு செய்துவிட்டேன்" என பதிவிட்டுள்ளார்.