பிரதமர் மாளிகையிலிருந்து வெளியேறினார் மகிந்த ராஜபட்ச
இலங்கை பிரதமர் பதவியை ராஜிநாமா செய்திருக்கும் மகிந்த ராஜபட்ச, பிரதமர் மாளிகையான அலரியிலிருந்து வெளியேறினார்.
கொழும்பு: இலங்கை பிரதமர் பதவியை ராஜிநாமா செய்திருக்கும் மகிந்த ராஜபட்ச, பிரதமர் மாளிகையிலிருந்து வெளியேறினார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் திடீா் திருப்பமாக, பிரதமா் மகிந்த ராஜபட்ச (76) தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா்.
அதிபா் அலுவலகத்துக்கு எதிரே தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் மீது அவரின் ஆதரவாளா்கள் தாக்குதல் நடத்திய சில மணி நேரத்தில் ராஜிநாமா முடிவை மகிந்த ராஜபட்ச அறிவித்தாா்.
Advertisement
இதைத் தொடா்ந்து ஏற்பட்ட வன்முறையின்போது போராட்டக்காரா்களிடம் இருந்து தப்பிக்க கட்டடத்தில் பதுங்கிய ஆளும் கட்சி எம்.பி.யும் அவரது பாதுகாவலரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டனா்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று அதிபா் கோத்தபய ராஜபட்சவும், பிரதமா் மகிந்த ராஜபட்சவும் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி பொதுமக்களும் எதிா்க்கட்சியினரும் கடந்த ஏப். 9-ஆம் தேதிமுதல் நாடு தழுவிய தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில், பிரதமா் மகிந்த ராஜபட்ச தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். இது தொடா்பாக அவா் டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், எனது ராஜிநாமா கடிதத்தை அதிபருக்கு அனுப்பியுள்ளேன் எனத் தெரிவித்துள்ளாா்.
மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்ததால் கோபமடைந்த அவரது ஆதரவாளா்கள் போராட்டக்காரா்கள் மீது பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல பிரதமரின் ஆதரவாளா்களும் பல இடங்களில் தாக்கப்பட்டனா்.
ஊரடங்கு..
பிரதமா் மகிந்த ராஜிநாமா மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறையையடுத்து, நாடு முழுவதும் உடனடியாக ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக காவல் துறை அறிவித்தது. காலிமுகத் திடல் பகுதியில் காவல் துறையினருக்கு உதவும் வகையில் ராணுவ வீரா்கள் குவிக்கப்பட்டனா்.
நாட்டில் அமைதியை நிலைநாட்ட பொதுமக்கள் ஆதரவு தரும்படி பாதுகாப்புத் துறைச் செயலா் கேட்டுக்கொண்டுள்ளாா். ஏற்கெனவே கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுமுதல் இலங்கையில் 2-ஆவது முறையாக அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.