பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்கிய வழக்கில் யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை விமரிசித்துள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு இந்தியா பதிலடி அளித்துள்ளது.
பயங்கர செயல்களுக்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மறைமுகமாக ஆதரவு அளித்துள்ளதாகவும் எந்த விதத்திலும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விவரித்த வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, "மாலிக்கின் பயங்கரவாத செயல்கள் ஆவணப்படுத்தப்பட்டு நிதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது" என்றார்.
செய்தியாளர்கள் கேள்விக்கு விரிவாக பதில் அளித்து பேசிய அவர், "யாசின் மாலிக்குக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் காரணமாக இந்தியாவை விமரிசித்து இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு தெரிவித்த கருத்தை ஏற்க முடியாது.
இந்த கருத்தின் மூலம், யாசின் மாலிக் செய்த பயங்கரவாத செயல்களுக்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மறைமுகமாக ஆதரவு அளித்துள்ளது. பயங்கரவாதத்தை உலகம் சகித்து கொள்ளவே கொள்ளாது. அதை நியாயப்படுத்த வேண்டாம் என கேட்டு கொள்கிறோம்" என்றார்.
கடந்த புதன்கிழமை, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்கிய வழக்கில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த யாசின் மாலிக்குக்கு தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. அதுமட்டுமின்றி, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
இதன் மூலம், அவர் இரட்டை ஆயுள் தண்டனை பெற்றுள்ளார். மே 19ஆம் தேதி, அவருக்கு தூக்கு தண்டனை கோரி தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் முறையிட்டது. தனக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றங்களை யாசின் மாலிக் ஒப்பு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.